ஜெய்ப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதி 10 பேர் பலி; 30 பேர் படுகாயம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர், சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜெய்ப்பூரின் லோஹா மண்டி பகுதியில் வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கார், பாதசாரிகள் ஆகியோர் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நெருக்கடி நிறைந்த இடத்தில் நேர்ந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் ஏராளமான மக்கள் கூடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை அளித்தனர். டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கார் ஒன்றின் மீது மோதி டிப்பர் லாரி நின்றது. ஜேசிபி மூலம் காரை மீட்ட போலீஸார், அங்கு போக்குவரத்தை சீர் செய்தனர்.

விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ப்பூர் காவல் ஆணையர் சச்சின் மிட்டல், “இதுவரை பத்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காயமடைந்தவர்களின் விவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம்.” என தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து ஜெய்ப்பூரில் உள்ள ஹர்மடா காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.