நாகப்பட்டினம்: இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 31 மீனவர்கள் அக்.31-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றிவளைத்து, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி, 31 மீனவர்களையும் கைது செய்தனர். 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில்கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது 3 இயந்திரமயமாக்கப்பட்ட படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படையினர், அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகையும் சிறைபிடித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் இருக்கிறது. எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உடனடியாக தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்:
பாமக தலைவர் அன்புமணி: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதல்வர் ஸ்டாலின் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். அமைச்சர்கள் மற்றும் மீனவர் சமுதாய பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்.
தவெக தலைவர் விஜய்: மீனவர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டுவதுபோல, எங்கள் மீனவர்கள் மீதும் அக்கறை காட்டி, இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.