கரூர்: கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ விசாரணை நடத்தினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அக்.30-ம் தேதி கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அக்.31-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தை சேர்ந்த வர்த்தகர்கள் 4 பேரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அக்.31 மற்றும் நவ.1-ம் தேதிகளில் வேலுசாமிபுரத்தில் சாலையை 3டி லேசர் ஸ்கேனர் மூலம் அளவீடு செய்யும் பணியையும், அப்பகுதி வர்த்தகர்களிடம் விசாரணை செய்யும் பணியையும் மேற்கொண்டனர்.
இவற்றை தொடர்ந்து வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீஸார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக நேற்று முன்தினம் நவ.2-ம் தேதி கரூர் சுற்றுலா மாளிகையில் 10-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், கரூர் காமராஜபுரத்தில் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பில் பணியாற்றி வரும் ராம்குமார் என்பவரை தேடிச் சென்றனர். அவர் இல்லாததால் மீண்டும் சுற்றுலா மாளிகைக்கு திரும்பினர்.
இதையடுத்து, கரூர் சுற்றுலா மாளிகையில் இருந்து நேற்று முன்தினம் 3 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் ரயில் மூலம் சென்னை சென்றனர். அங்கு பனையூர் தவெக அலுவலகத்திற்கு நேற்று சென்று பிரச்சார வாகனத்தில் உள்ள 4 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் விவரங்களை கேட்டு சம்மன் வழங்கியுள்ளனர். கரூர் சுற்றுலா மாளிகையிலும் பேக்கரி கடைகாரர், கேட்டரிங் கல்லூரி உரிமையாளர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில், செப்.27-ம் தேதி தவெக பிரச்சார கூட்டத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்கள், தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் என 10-க்கும் மேற்பட்டவர்கள் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ முன்பு ஆஜராகினர். அவர்களிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவர்கள் பணியில் இருந்த இடத்தில் என்ன நடந்தது என்பன உள்ளிட்ட விவரங்களை சிபிஐ அதிகாரிகள் கேட்டறிந்தனர்.