சென்னை: ‘நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் நடைபெற்ற மோசடி குறித்து தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும்’ என்று டிஜிபியிடம் தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 2024-25 மற்றும் 2025-26-ம் ஆண்டுக்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், காலிப்பணியிடங்களுக்காக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய அளவிலான ஊழல்நடந்திருப்பதாக அமலாக்கத்
துறை குற்றம்சாட்டி உள்ளது.
அந்தவகையில், 2,538 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு முறையில் அதிகளவில் லஞ்சம் பெற்று மதிப்பெண்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்து டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பி இருந்தது. எனவே, அமலாக்கத் துறை அனுப்பிய ஆவணங்கள் மூலம், ஊழல் தடுப்பு சட்டம் 7, 13 பிரிவுகள், பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்க வேண்டும். ஆதாரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க, அமலாக்கத் துறையின் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து டிஜிட்டல் உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.