தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கப்பட்ட உரிமையில் மிக முக்கியமானது. வாக்காளர் அடையாள அட்டை, வாக்குரிமை என்பது ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.
இதைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்ட உடனே, எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இருக்கும் யாருக்குமே ஓட்டு போடும் உரிமையே இல்லை என்று கூறி நம்ப வைக்கலாம். நான் பயமுறுத்துகிறேன் என்று நினைக்க வேண்டாம். அதுதான் நிஜமும் கூட. ஓட்டு போடும் உரிமையே இல்லாத மாதிரி ஒரு நிலைமை வந்தாலும் வரலாம். இதற்கு முக்கிய காரணம் அந்த எஸ்.ஐ.ஆர். சிறப்பு தீவிர திருத்தம். இப்போது இந்த எஸ்ஐஆர் தமிழ்நாட்டில் எப்படி செல்லுபடியாகும்? சிறப்பு தீவிர திருத்த படிவத்தை நாம் பூர்த்தி செய்து, பி.எல்.ஓ.விடம் கொடுக்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் சரிபார்க்கும். அதன் பிறகு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அந்த வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் ஓட்டு போட முடியும்.
இதில் நிறைய குழப்பங்களும் இருக்கின்றன. மேலும் புதிய வாக்காளர்களுக்கு Form-6 என்று ஒன்று இருக்கிறது. அதை பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட அலுவலத்தில் நேரடியாக கொடுக்கலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். அதற்கான ஆதாரங்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் செல்போனில் குறுஞ்செய்தி வரும். அதன்பிறகு அதில் வரும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். முதலில் உங்கள் பகுதியின் பி.எல்.ஓ. யாரென்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று அதை பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக அவர்களின் செல்போன் எண்ணையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆறு கோடியே 36 லட்சம் வாக்காளர்களுக்கு, ஒருத்தர் விடாமல் இந்த ஒரே மாதத்தில் எப்படி எல்லாருக்கும் அந்த படிவம் சென்று சேரும்? அப்படி இந்த படிவம் கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆன்லைனில் சென்று படிவத்தை பெற முடியும். இதை உங்கள் குடும்பங்களுக்கு, உறவினர்களுக்கு, அருகில் உள்ள வீட்டார்களுக்கு, தெரிந்தவர்களுக்கு, தெரியவாதவர்களுக்கு என்று அனைவருக்கும் செய்து கொடுங்கள்.
முக்கியமாக Gen-Z இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். காரணம் என்னவென்றால், வரவிருக்கும் தேர்தலில் முக்கிய அங்கமேGen-Z இளைஞர்கள் தான். இவர்களை தொந்தரவு செய்வதற்கு என்னவெல்லாமோ தில்லு முல்லு வேலைகள் செய்வார்கள். நம்முடைய முக்கிய ஆயுதமே, ஓட்டு, ஜனநாயகம் தான். தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி முன் திரண்டு நிற்க வேண்டும். அதை பார்த்து தமிழ்நாடே தமிழக வெற்றிக் கழகமா… இல்லை, தமிழக வெற்றிக் கழகம்தான் தமிழ்நாடா என்று நினைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்: தேர்தல் ஆணையத்துக்கு விஜய் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தேர்தல் ஆணைய கூட்டங்களுக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை.பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தவெகவிற்கும் அழைப்பு விடுக்க வேண்டும். தேர்தல் செயல்முறைகள் முழுமையாக, வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றால், தவெக-வையும் அடுத்தடுத்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அழைக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தவெக தயாராக இருக்கிறது. தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக முதன்மை தேர்தல் அதிகாரிக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.