சென்னை: சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கப்பட்ட நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தியதால், 3.12 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக சேவைக்கான நிபந்தனைகளின் அடிப்படையில் அம்பத்தூர், ஒரகடம் பகுதியில் உள்ள அன்னை ஆதரவற்றோர் இல்லத்துக்கு 3.12 ஏக்கர் நிலம் அரசு சார்பில் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சமூக சேவைக்காக வழங்கப்பட்ட நிலத்தை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்திய காரணத்தால் அன்னை ஆதரவற்றோர் இல்லத்துக்கு ஒப்படைப்பட்ட 3.12 ஏக்கர் நிலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில், மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அந்நிலத்தை கடந்த 14-ம் தேதி மீட்டெடுத்துள்ளது.
வருவாய் வாரியத்தின் நிலை ஆணைகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, மீட்கப்பட்ட நிலம் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.