தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8 தேதி, “தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல். அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்டவிரோதம்.

அந்த 10 மசோதாக்களும் உடனடியாகச் சட்டமாக்கப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டன. மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவெடுக்க வேண்டும்” எனக் காலக்கெடு நிர்ணயம் செய்து தீர்ப்பளித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மே 13-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 143-ஐ பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் கடந்த செப்டம்பர் மாதம் தொடர்ந்து 10 நாள் விசாரிக்கப்பட்டது.
இதில், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹரீஷ் உள்ளிட்டோரும், மத்திய அரசு வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார்.
அதில், “குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் மீது அனைத்து தரப்பிலிருந்தும் விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அரசியல் சாசன பிரிவு 200-அதிகாரங்கள் விரிவாக அலசி ஆராயப்பட்டது.
அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள், மசோதா மீது முடிவெடுக்க அவருக்கு உள்ள உச்சவரம்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முதல் பிரச்சினை , மசோதா மீது ஆளுநர் என்னென்ன நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என்பது பற்றி தான்…

ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டவுடன், அதன் மீது முடிவெடுக்க நான்கு விருப்பங்களை அவருக்கு வழங்குகிறது என ஒரு தரப்பினர் கூறியிருக்கிறார்கள். இன்னொரு தரப்பு மூன்று வாய்ப்புகள் மட்டும் தான் அவருக்கு இருக்கிறது, அது ஒப்புதல், அளிப்பது நிறுத்தி வைப்பது, அல்லது சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புவது. அல்லது இரண்டாவது முறை ஆளுநர் ஒரு மசோதாவை கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. ஒரு மசோதாவை நிறுத்தி வைக்கும் பொழுது அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்தால், அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும்.
மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. இந்தியாவின் கூட்டாட்சியில், ஆளுநர்கள் ஒரு மசோதா தொடர்பாக அவையுடனான வேறுபாடுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக்கூடாது.

அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் இருக்கிறது. மத்திய அரசு சொல்வது போல நான்காவது வாய்ப்பு இல்லை.
மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதை அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்,
இல்லையென்றால் நிராகரிக்க வேண்டும்.
அதை விடுத்து கால வரம்பின்றி மசோதாக்களை முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கோ அல்லது மறுபரிசீலனைக்காக மசோதாவை நிறுத்தி வைக்கவோ, திருப்பி அனுப்புவதற்கோ ஆளுநர் அதிகாரம் பெறுகிறார். ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அதை சட்டப்பேரவைக்கு அவர் அனுப்பி வைக்கிறார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அவர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தால் அதை கட்டாயமாக சட்டமன்றத்திற்கு தகுந்த காரணங்களை சொல்லி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.