பாகிஸ்தானில் 200 சதவீதம் எச்.ஐ.வி அதிகரிப்பு

இஸ்லாமாபாத்,

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தகவலின்படி, கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் மிக வேகமாக வளர்ந்து வரும் எச்.ஐ.வி. தொற்றுநோய்களில் ஒன்றை பாகிஸ்தான் தற்போது எதிர்கொண்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில், புதிய எச்.ஐ.வி. தொற்றுகளின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்து, 2010-ல் 16,000 ஆக இருந்தது, 2024-ல் 48,000 ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்பற்ற ஊசி நடைமுறைகள், இரத்த மேலாண்மை குறைபாடுகள், மற்றும் பாதுகாப்பற்ற பாலியல் உறவு முறை போன்ற காரணங்களால் இந்த அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சுமார் 350,000 பேர் எச்.ஐ.வி.யுடன் வாழ்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் தங்கள் நிலையைக் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். மேலும், குழந்தைகளிடையே புதிய தொற்றுகள் அதிகரித்து வருகின்றன (2010-ல் 530 ஆக இருந்தது, 2023-ல் 1,800 ஆக உயர்ந்துள்ளது).

தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவுவதைத் தடுக்கச் சிகிச்சை தேவைப்படும் கர்ப்பிணிப் பெண்களில் வெறும் 14 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள் என்றும், எச்.ஐ.வி.யுடன் வாழும் 0-14 வயதுக் குழந்தைகளில் 38 சதவீத பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எய்ட்ஸை ஒழிக்கக் கூட்டு முயற்சி தேவை என்று வலியுறுத்தியுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.