திருப்பரங்குன்றம்: "எதற்காகவும் வேண்டாம்!" – பக்தர் தீக்குளித்து இறந்தது குறித்து அண்ணாமலை அறிக்கை!

கார்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகிலுள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கியிருந்தது.

சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் மதநல்லிணக்கத்தைச் சீர்குழைத்ததாக பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

இந்நிலையில், தீபம் ஏற்றத் தடை விதித்த திமுக அரசைக் கண்டித்து பூர்ண சந்திரன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்திருப்பதாக அறிக்கை ஒன்றை பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியைச் சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் திரு. பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம்.

இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

சகோதரர் பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.