'எஸ்.பி ஆபீஸுக்கு போய் வீலிங் வீடியோ போடப் போறோம்'- ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்… 'திருத்திய' போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பைக்குகளை ஓட்டிச் சென்று சாகசங்கள் செய்து அதனை  ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டா மற்றும்  முகநூலில் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்பவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீஸார் தேடிப் பிடித்து பைக்குகளை பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில்  நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோவில் பேசிய வாலிபர் ஒருவர், “காய்ஸ் நாம மாவட்ட எஸ்.பி ஆபீஸுக்கு உள்ளேபோய், வண்டியை திருகி வீடியோ போடப்போறோம். முடிந்தால் போலீஸ்காரன் (அச்சில் ஏற்றமுடியாத வார்த்தை) தூக்குறானா பாப்போம். அதனால இந்த வீடியோவை ட்ரென்ட் பண்ணி விடுங்க” என பேசியிருந்தார். போலீஸ் எஸ்.பி அலுவகத்துக்கே போய் ரீல்ஸ் எடுப்போம் எனவும், முடிந்தால் காவல்துறையினர் தங்களை கைது செய்து பார்க்கட்டும் என்ற ரீதியில் வாலிபர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த வாலிபரை போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவரது பெயர் வினீத்(22) என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த வாலிபர் வெளியிட்ட வீடியோவில், “நாங்கள் எஸ்.பி ஆப்பீஸின் முன்னால் பைக்கில் சென்று சாகசத்தில் ஈடுபடுவோம் என ரீல்ஸ் வெளியிட்டோம். இதை சோசியல் மீடியாவில் பார்த்து போலீஸார் எங்களை அழைத்து அறிவுரை தந்தார்கள். நாங்கள் இதுபோன்ற தப்பை பண்ணமாட்டோம். நீங்களும் யாரும் அதுபோன்று செய்யவேண்டாம். டிராபிக் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க” என அந்த வாலிபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

போலீஸ் அறிவுரை சொன்னபிறகு வீடியோ வெளியிட்ட வினீத்

அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி டாக்டர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1544 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வரப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 80 தற்காலிக சோதனைச்சாவடிகள், சுமார் 54 நான்கு சக்கர ரோந்துகள், 27 இருசக்கர வாகன ரோந்து அமைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் காவல்துறை தீவிரமாக கண்காணித்து விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி டாக்டர் ஸ்டாலின்
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி டாக்டர் ஸ்டாலின்

கடலில் இறங்கி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. இசை நிகழ்ச்சி மற்றும் ஆடல் பாடல்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக மற்றும் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக சமூகவலைதளங்களில் பதிவு செய்பவர்கள் கண்காணிக்கப்படுவர். இருசக்கர வாகன சாகசங்கள் தொடர்பாக பொதுமக்கள் 7708239100 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம். 18 வயதிற்க்கு கீழ் உள்ள இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று ANPR கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு 160 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுபோன்று புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் ANPR கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.