திருப்பதி: பாதாம் பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு

திருமலை,

திருப்பதி நகரம் பழைய மாநகராட்சி அலுவலக பின்பக்க தெருவில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். இவரின் மனைவி விஜயா (வயது 63). இவர், 2-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொர்க்க வாசல் தரிசனத்துக்காக வந்தார். இலவச தரிசன வரிசையில் சென்றபோது, உடன் வந்த ஒரு பெண் நைசாகப் பேச்சு கொடுத்தார். அந்தப் பெண்ணுடன் விஜயா பேசிக்கொண்டே இருந்தார். இருவரும், சகஜமாகப் பழகினர்.

3-ந்தேதி காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 2-ல் 20-வது கம்பார்ட்மெண்டில் 2 பேரும் ஓய்வெடுத்தனர். அங்கு, ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு பாதாம் பால் வினியோகம் செய்தனர். 2 கப் பாதாம் பாலை வாங்கி வந்த பெண் ஒரு கப்பில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விஜயாவை குடிக்க வைத்துள்ளார். பாதாம் பாலை குடித்த சிறிது நேரத்தில் விஜயா திடீரென மயக்கமடைந்தார். அந்த நேரத்தில் விஜயா கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு பெண் அங்கிருந்து தப்பி சென்றார்.

சிறிது நேரத்துக்கு பிறகு திடுக்கிட்டு எழுந்த விஜயா கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே திருமலை 1-டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டு தேடி வந்தனர்.

நேற்று திருமலை எச்.டி.காம்ப்ளக்ஸ் குளியல் அறை அருகில் நின்றிருந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் தாலுகா கப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகிசெட்டி சுப்பிரமணியத்தின் மனைவி நாகரத்தனம்மா (45) என்றும், விஜயாவிடம் தங்கச் சங்கிலியை பறித்ததாகவும் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.