தமிழக வெற்றிக் கழகம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எந்தக் கட்சியுடணும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டிலை அறிவித்துள்ளார் விஜய்.
இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக தனது நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத்தை அறிவித்துள்ளார். கட்சி தொடங்கியது முதலே தூத்துக்குடி தொகுதியில் களப்பணி ஆற்றி வந்த அஜிதா ஆக்னல், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால், தமிழ் மாநில காங்கிரஸின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலனின் உடன்பிறந்த சகோதரரான எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ், த.வெ.கவின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால், அதிருப்தி அடைந்த அஜிதா ஆக்னல், பனையூரில் நடிகர் விஜய்யின் காரை வழிமறித்ததுடன் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனையடுத்து தூத்துக்குடிக்கு வந்த அஜிதா ஆக்னல், விரக்தியில் தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் த.வெ.க வேட்பாளராக நடிகர் விஜய்யின் நண்பர் நடிகர் மற்றும் இயக்குநருமான ஸ்ரீநாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு மனையியும், ஒரு மகளும் உள்ளனர். இவர், அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்டின் சகோதரி மகன் என்பதும், மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு தூத்துக்குடி த.வெ.கவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டாக தூத்துக்குடியில் த.வெ.க சார்பில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார் அஜிதா ஆக்னல். மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காவிட்டாலும், எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என்ற நினைப்பில் இருந்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இதனால், அஜிதா ஆக்னலின் ஆதராவாளர்கள் தங்களின் கார்களில் இருந்த த.வெ.க கட்சிக் கொடியை அகற்றியும், வீடுகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களையும் கிழத்தனர். பெண்கள் பலரும் விசில்களை தரையில் போட்டு உடைத்தனர். சிலர் கொடியை தீயிட்டும் கொளுத்தி அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இது ஒருபுறமிருக்க அஜிதா ஆகன்லுக்கும், மாவட்ட செயலாளரன சாமுவேல்ராஜூவுக்கும் இடையே கோஷ்டிப்பூசலால், தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில்தான் சென்னையிலுள்ள தனது நண்பரான ஸ்ரீநாத்தை தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்க விஜய் முடிவெடுத்தார் எனவும், இந்த யோசனையை கூறியதே பொதுச் செயலாளர் ஆனந்த்தான் என்கின்றனர்.