மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவரின் மகள் நபியாஶ்ரீ (6). நபியாஶ்ரீக்கு காய்சல் அடித்ததால் மருத்துவரிடம் சிகிச்சை பெற தன் தம்பி கபில்தேவ் முருகன் (17) உடன் மூவரும் டூவீலரில் மண்டபம் முகாமிற்கு சென்றனர். மருத்துவர் வீட்டுக்குச் செல்லும் வழியில் மரைக்காயர் பட்டினத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கபில்தேவ் முருகன் பெட்ரோல் போட சென்றுள்ளார்.
அங்கு பெட்ரோல் நிரப்பிய பின் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றபோது வேதாளை குஞ்சார்வலசை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகன் ரித்தீஷ் (18) என்பவர் ஓட்டிவந்த டூ வீலர் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சிறுமி நபியாஶ்ரீ மற்றும் அவரின் தாய் மாமா கபில்தேவ் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்கள் மீது மோதிய ரித்தீஷும் விபத்து நடந்த இடத்திலேயே பலியானார். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்த சிறுமியின் தாய் கவுசல்யாவை மீட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த மண்டபம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காய்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற சிறுமி உள்ளிட்ட மூவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோதத்தை ஏற்படுத்தி உள்ளது.