சன் பிக்சர்ஸ் – ரஜினி – நெல்சன் கூட்டணி… ஏப்ரலில் பூஜை, மே மாதம் படப்பிடிப்பு!

சன் பிக்சர்ஸ் இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறது என ட்விட்டரில் அறிவித்திருக்கிறது. இது பற்றி தயாரிப்புத் தரப்பில் விசாரித்தோம்.

அதற்கு முன்பாக, சன் பிக்சர்ஸ் இப்போது விஜய்யின் ‘பீஸ்ட்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ உள்பட பல படங்களைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் ரஜினியை வைத்து படம் தயாரிக்கவிருப்பதாகவும் அதை ‘பீஸ்ட்’ நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்றும் சில நாள்களாகவே கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது. விஜய்யின் ‘பீஸ்ட்’ நூறாவது நாள் படப்பிடிப்பு நிறைவடைந்த போது, அந்த இடைவெளியில் நெல்சனைக் கூப்பிட்டு ‘கதை இருக்கிறதா?’ என ரஜினி கேட்டிருக்கிறார். நெல்சனோ உடனடியாக ஒரு காமெடி லைனை சொல்ல, அது ரஜினிக்கும் பிடித்து விட்டதாக சொல்கிறார்கள். அதன்பின்தான் தயாரிப்பு நிறுவனம் முடிவாகியிருக்கிறது என்றும் பேச்சு.

ரஜினி

ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ் இதற்கு முன் ‘அண்ணாத்த’ படத்தைத் தயாரித்திருந்தது. அந்தப் படம் விமர்சன ரீதியாக இருவேறு கருத்துக்கள் இருந்தாலும், படம் வசூலை குவித்தது என்றும் அது வெற்றிப்படம் என்றும் ரஜினியே மனம் திறந்து பேசினார். அப்படிச் சொன்னதோடு மட்டுமில்லாமல் அதில் பணிபுரிந்த இயக்குநர் சிவாவிலிருந்து டெக்னீஷியன்கள் டீம் வரை அனைவருக்கும் தங்கச்சங்கிலி பரிசளித்து அணிவித்து மகிழ்ந்தார். ‘கலாநிதி மாறன் சாரும் ஹேப்பி’ என ஒரு ஹின்ட்டும் அப்போதே கொடுத்தார். அந்த ஹேப்பிதான் இப்போது மீண்டும் கைகோக்கக் காரணம்.

யெஸ்… சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’வுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ஏப்ரல் 14, சித்திரையில் படப்பூஜை என்றும், மே மாதம் படப்பிடிப்பு அமர்களமாக ஆரம்பமாகவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இதே சன் பிக்சர்ஸ்க்காக விஜய்யை வைத்து நெல்சன் இயக்கியிருக்கும் ‘பீஸ்ட்’ படம் வரும் ஏப்ரலில் திரைக்கு வரலாம் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.