சீனாவிடம் இருந்து நவீன போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்:
சீனாவும், பாகிஸ்தானும் ராணுவ மற்றும் ஆயுத அமைப்புகளை மேம்படுத்த பல திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இதில் ஜே.எப்.-17 தண்டர் போர் விமானமும் அடங்கும்.
சீனாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த நவீன போர் விமானத்தின் புதிய ரகத்தை பாகிஸ்தான் அடுத்த மாத இறுதிக்குள் சீனாவிடம் இருந்து வாங்குகிறது. இதன் மூலம் பாகிஸ்தான் வான் பாதுகாப்பில் புதிய பலத்தை பெறும் என்று அந்நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஜே.எப்-17 தண்டர் பிளாக் 3 ஜெட் விமானங்கள் வருகிற மார்ச் 23-ந்தேதி ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கும் என்று பாகிஸ்தான் விமானப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விமானங்களின் பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந்த விமானங்கள் மார்ச் மாத இறுதிக்குள் பாகிஸ்தான் கடற்படையில் பயன்படுத்தப்பட உள்ளது.
ஜே.எப். தண்டர் நவீன போர் விமானம் மேம்படுத்தப்பட்ட, இலகுவான எடை கொண்ட விமானம் ஆகும். எல்லா வித வானிலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தான் ஏரோநாட்டிக்கல் காம்ப்ளக்ஸ் மற்றும் சீனாவில் உள்ள விமான தொழில் கழகம் ஆகியவை இணைந்து உருவாக்கி உள்ளன.
இந்த விமானத்தில் உலகின் அதிநவீன வான்வழி எலக்ட்ரானிக் ஸ்கேன் வசதி, ரேடார் மற்றும் பி.எல்.15 ஏவுகணைகள் உள்ளன.
இது இந்தியாவின் ரபேல் போர் விமானத்தின் வலிமையை ஈடு செய்யும் என்று எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.