ஆம் ஆத்மி கட்சி பொய் சொல்கிறது: ராகுல் காந்தி சாடல்!

உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் வருகிற 20ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அரியணையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறது.

ஆனால், அம்மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளன. பாஜகவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்துள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சாவின் சிரோன்மனி அகாலி தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.

இருந்தாலும், விவசாயிகள் போராட்டம் காரணமாக பஞ்சாபில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, பஞ்சாபை பொறுத்தவரை காங்கிரஸ்-ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையேதான் போட்டி என்கிறார்கள்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, எப்போதும் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து தான் நான் வளர்க்கப்பட்டேன். எனவே, நான் உண்மையை மட்டும்தான் பேசுவேன். நீங்கள் பொய்யான வாக்குறுதிகளை கேட்க விரும்பினால், மோடி ஜி சொல்வதை கேளுங்கள் என்று சாடினார். கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி மத்திய அரசை நான் எச்சரித்தேன், ஆனால் அவர்கள் என் கருத்தை பொருட்படுத்தவில்லை என்றும்
ராகுல் காந்தி
அப்போது குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர், ஆம் ஆத்மி கட்சியினர், தாங்கள் தான் முதன்முதலாக மொஹல்லா கிளினிக்குகளை தொடங்கியதாக கூறுகின்றனர். ஆனால் முதல் மொஹல்லா கிளினிக் காங்கிரஸ் ஆட்சியில் ஷீலா தீக்சித்தால் ஆரம்பிக்கப்பட்டது என்றும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.