ஒரே நாளில் ரஷியாவில் 1.71 லட்சம் பேருக்கு கொரோனா: 745 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ :

ரஷியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த சில நாட்களாக ருத்ரதாண்டவமாடி வருகிறது. ஒவ்வொரு நாளும், ஒன்றரை லட்சத்துக்கு அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது.

நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதனால் மொத்த பாதிப்பு 1 கோடியே 53 லட்சத்து 70 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் 745 பேர் தொற்றில் இருந்து மீள முடியாமல் உயிரிழந்தனர். இதுவரையில் அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 45 ஆயிரத்து 500 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 296 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

இதுவரையில், 1 கோடியே 23 லட்சத்து 65 ஆயிரத்து 238 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டிருக்கிறார்கள்.

மாஸ்கோவில் மட்டுமே நேற்று ஒரு நாளில் 6,388 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அங்கு இதுவரை 26 லட்சத்து 64 ஆயிரத்து 189 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை உருவாக்கிய அந்த நாட்டில் இதுவரையில், 8 கோடியே 66 லட்சம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியையும், 8 கோடியே 26 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

இங்குள்ள மக்களின் மந்தை எதிர்ப்பு சக்தி, ஏறத்தாழ 60 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.