தமிழகத்தில் 3,4,5ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை <!– தமிழகத்தில் 3,4,5ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் – சென… –>

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் வருகிற 3-ந் தேதி கனமழையும், 4-ந் தேதி அதிகனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை – தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாளை மறுதினம் நாகை, மயிலாடுதுறை, கடலூரில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. 4-ந் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் அதி கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மிக கனமழையும் பெய்யக்கூடும் எனத்தெரிவிக்கப்பட்டு உள்ளது.

5-ந் தேதியும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும், சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக் கடல், தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.