சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தைத் திரையிடக்கூடாதென மிரட்டல்: தமுஎகச கண்டனம்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. முன்னணி நடிகர்களின் பங்களிப்புடன் வரும் 10-ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை  திரையிடக்கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் மூலம் மிரட்டி வருவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. 

2021 நவம்பரில் வெளியான ஜெய்பீம் படம், வன்னியர்களை அவமதித்து விட்டதாகவும் அதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், கதாநாயகருமான சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தவொரு படத்தையும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என அப்போது பாமகவினர் மிரட்டல் விடுத்திருந்தனர். அந்த மிரட்டலின் தொடர்ச்சியாக இப்போது எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக்கூடாதென அக்கட்சியினரும், வன்னிய சங்கத்தினரும் மிரட்டிக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கருத்து சுதந்திரத்திற்கு இவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைவதற்கும், மிரட்டலுக்குப் பணியாமல் படத்தை வெளியிடுவதற்கு உகந்தச் சூழலை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் பெயரால் விடுக்கப்பட்டுள்ள இம்மிரட்டலுக்கு எதிராக குரலெழுப்புமாறு கருத்துரிமையில் நம்பிக்கையுள்ள யாவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது என அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர்  மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.