மகன் பிறக்காததால் ஆத்திரம்: மகளை கொன்ற தந்தைக்கு வலை

லாகூர்: தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற ஆத்திரத்தில், பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தையை சுட்டுக் கொன்ற தந்தையை, போலீசார் தேடி வருகின்றனர்.

அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், மியான்வாலியை சேர்ந்தவர் ஷஜாய்ப் கான். மஷல் பாத்திமா என்பவரை திருமணம் செய்த அவர், தனக்கு முதலில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், கர்ப்பிணியாக இருந்த பாத்திமாவுக்கு, கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. இதையறிந்த ஷஜாய்ப் கான், தாயையும், குழந்தையையும் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு, வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பிய அவர், அலமாரியில் இருந்த துப்பாக்கியை எடுத்து, பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தையை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினார். இதில் குழந்தை இறந்தது. அதிர்ச்சியடைந்த பாத்திமா, இது பற்றி போலீசில் புகார் செய்தார். ஷஜாய்ப் கானை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.