பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுனரை அகற்ற சட்ட திருத்தம்: மார்க்சிஸ்ட் தீர்மானம்

CPM resolution on remove Governor from Universities chancellor: பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை அகற்றும் சட்டத்திருத்தத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிட வேண்டும் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பல்கலைக்கழகப் பொறுப்பில் இருந்து ஆளுநரை அகற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது இதற்காக சட்டத்திருத்தம் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது. மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ. சவுந்தரராசன், பி. சம்பத், உ. வாசுகி உள்ளிட்டு மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய இரண்டாம் நாள் (15.3.2022) கூட்டத்தில் ஆளுநரை வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் எனவும், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானங்களின் விவரம் பின்வருமாறு:

தீர்மானம் – 1:

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை அகற்றும் சட்டத்திருத்தத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிட வேண்டும் தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்தல்

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே அண்மை காலத்தில் முரண்பாடு முன்னுக்கு வருவதைத் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட  மாநிலங்களில் காணமுடிகிறது. புதுச்சேரி கடந்த காலத்தில் இதனைக் கடுமையாக சந்தித்தது. குறிப்பாக, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம், மாநில அரசு உருவாக்குகிற சட்டம் அல்லது சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் முடக்குதல் போன்ற நடவடிக்கைகளில் இந்த முரண்பாடு பிரதிபலித்து வருகிறது. அதிமுக ஆட்சியின் போது, கட்சிக்குள் எழுந்த பிரச்னைகளில் ஆளுநர் தலையிட்டு, ஒன்றிய ஆளும் கட்சியின் முகவர் போல செயல்பட்டது இப்போக்கின் உச்சகட்ட வெளிப்பாடு. பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்படும்  போது அல்லது கவிழ்க்கப்படும் போது ஆளுநர்களை ஒன்றிய அரசு அப்பட்டமாகப் பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தற்போது தமிழ்நாடு ஆளுநர், தென்மண்டல துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை மிகுந்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நீட் தேர்வு எதிர்ப்பு சூழலில் கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தம் பெற்றுள்ள நிலையில், மாநில நிலைபாட்டுக்கும், நலனுக்கும் எதிராக ஆளுநர் பேசியிருக்கிறார். அதே போல், மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்று அரசியல் சாசனம் குறிப்பிடுவதில் பிரதிபலிக்கும் பன்மைத்துவம் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டைத் தளர்த்தும் விதமாக, மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை சிதைக்கும் விதமாக, இது இயல்பான ஒன்றிணைப்பு (Organic union) என்றும், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரு முனையிலிருந்து மறு முனை வரை கலாச்சார ஆன்மீக மாண்புகளின் அடிப்படையில்  நீடித்து வந்துள்ளது என்றும்  பேசியுள்ளார். இத்தகைய பேச்சு உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்த குரல் என்பதோடு, ஆளுநரின் அதிகார வரம்பைத் தாண்டியதாகவே கருத முடியும். இது கண்டிக்கத்தக்கது.

வேந்தராக இருந்து துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் மாநில சட்டத்தின் கீழ் ஆளுநருக்கு அளிக்கப்படுவதே. மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டத் திருத்தத்தின் மூலம் அந்த அதிகாரம் ஆளுநரிடமிருந்து அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதனைப் பரிசீலித்து, சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து, ஆளுநர் அதிகாரத்தை அகற்ற வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்டுக்கொள்கிறது.

இதையும் படியுங்கள்: 3 அமைச்சர்களுடன் ஆளுநர் ரவியை சந்தித்த ஸ்டாலின்: பேசியது என்ன?

ஆளுநர் பதவி தேவையற்றது என்பது துவக்கத்திலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. தற்போதைய சூழலில் இந்த விவாதம், மத்திய, மாநில உறவுகள் சீரமைப்பு என்ற சட்டகத்தின் பின்புலத்தில் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவரை ஆளுநர் நியமனம் அரசியல் நியமனமாக இருக்கக் கூடாது என்பதோடு, நியமனம், மாற்றம் அனைத்தும் மாநில அரசாங்கங்களின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் – 2: அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டு பல்கலைகழகங்களில் அவுட்சோர்சிங்-ஐ கைவிடுக!

சென்னை அண்ணா பல்கலைக் கழகம் தமிழகத்தில் பாரம்பரியமான தொழிழ்நுட்ப கல்வி நிறுவனம் ஆகும். இதன் வளர்ச்சி உலகப் புகழ் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களுடன் கூட்டான பயிற்சி வகுப்புகளை நடத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் நிதிப்பற்றாக்குறை என்ற பெயரில் பலகலைக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத தொழில்நுட்ப ஊழியர்களை அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 10 முதல் 17 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் சுமார் 500 ஊழியர்கள் பல்கலைக் கழகத்தின் மேற்படி முடிவு காரணமாக வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இவர்களில் பெரும்பான்மையோர் பி.இ., போன்ற பட்டம் பெற்றவர்கள். இனி வெளியில் வேறு வேலைகளை தேடும் வாய்ப்பு இல்லை. எனவே பல்கலைக் கழகம் மேற்படி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட, தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.