பேரறிவாளன் விவகாரம் மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதா?- அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என நளினி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் நளினியை தொடர்ந்து சிறையில் அடைத்திருப்பது சட்டவிரோதம் என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கவர்னருக்கு எதிராக உத்தரவிடும்படி கோர முடியாது. ஏற்கனவே மூன்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை எப்படி ஏற்க முடியும்? தீர்மானத்தின் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் என்ன உத்தரவை பிறப்பிக்க முடியும்? கவர்னர் ஒப்புதல் இல்லாமல் ஆயுள் கைதியை எப்படி முன்கூட்டி விடுதலை செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், முன்கூட்டி விடுதலை செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதா? அல்லது 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.