அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பெங்களூரு :

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஒரு நாள் பயணமாக கர்நாடகத்திற்கு வருகை தருகிறார்.

அவர் அரசு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று(வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். இன்று இரவு பெங்களூருவில் தங்கும் அவர், நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு துமகூரு சித்தகங்கா மடத்தில் நடைபெறும் மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமியின் 115-வது பிறந்தநாள் குரு வந்தனா விழாவில் கலந்து கொள்கிறார்.

அந்த விழாவை முடித்து கொண்டு மதியம் 2 மணிக்கு அதே மாவட்டத்தில் முத்தேனஹள்ளியில் புதிய மருத்துவ கல்லூரி கட்டிட கட்டுமான பணிகளுக்கு நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

அதன்பிறகு அவர் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்கிறார். அதில் அவர் கர்நாடக அரசு அறிவித்துள்ள பால்வள கூட்டுறவு வங்கியின் முத்திரையை வெளியிடுகிறார். அத்துடன் யசஸ்வினி மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பால்வள கூட்டுறவு வங்கிக்கு கர்நாடக அரசு ரூ.100 கோடி வழங்குகிறது. அத்துடன் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் ரூ.260 கோடி வழங்குகின்றன.

இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் ரூ.100 கோடி முதலீட்டில் பால்வள கூட்டுறவு வங்கியை தொடங்குகிறோம். இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் கிடைக்கும். கர்நாடகத்தில் 26 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். 14 ஆயிரத்து 900 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் உள்ளன. 15 பால் கூட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த இந்த பால்வள கூட்டுறவு வங்கி உதவும்.

விவசாயிகளுக்காக யசஸ்வினி மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துகிறோம். உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா, 1-ந் தேதி (நாளை) கர்நாடகம் வருகிறார். அவர் கூட்டுறவுத்துறை தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பால்வள வங்கி முத்திரையை அவர் வெளியிடுகிறார். மேலும் அன்று மாலையில் நடைபெறும் பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அவர் வருகையின்போது கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறாது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்த நிலையில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் அமித்ஷா பங்கேற்கும் கூட்டுறவு மாநாட்டுக்கான ஏற்பாடுகளையும், பாதுகாப்பு ஏற்பாடு களையும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை மற்றும் மந்திரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதுபோல் துமகூரு சித்தகங்கா மடத்தில் நடைபெற்று வரும் விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. பிரதாப் ரெட்டி, மத்திய மண்டல ஐ.ஜி. சந்திரசேகர் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அமித்ஷாவின் வருகையையொட்டி தலைநகர் பெங்களூரு, துமகூரு ஆகிய மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.