திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்தை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்- இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு

சென்னை:
தமிழக இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் தொடர்பாக உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவின்படி திரிசு தந்திரர்களை முறைப்படுத்துதல் மற்றும் தரிசன வரிசைகளை முறைப்படுத்துதல் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கடிதங்கள் மூலம் கோயில் இணை ஆணையர், செயல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கோயிலில் 26.03.2022 கூடுதல் ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அளிக்கப்பட்ட அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, கோவில் நலன் மற்றும் பக்தர்கள் நலன் கருதி ஏற்கனவே செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளன.
கோயிலில் “அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்யப்படும்” என்ற விளம்பர பலகை “எல்.இ.டி. போர்டு”ல் பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் வைக்கவும், கோவிலில் உள்ள திரிசுதந்திரர்களை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவினையும், ஆணையர் உத்தரவினையும் முழுமையாக செயல்படுத்தவும், கோயிலுக்குள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வரிசைமுறை நீங்கலாக தேவையில்லாத இடங்களில் உள்ள மற்ற எஸ்.எஸ்.வரிசை முறை அமைப்புகள் அனைத்தையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருவறைக்கு அருகில் உள்ள மகாமண்டபத்தில் தேவையின்றி உள்ள பித்தளை வரிசை முறை அமைப்புகளையும் அகற்ற வேண்டும் என்றும், பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தேவர் குடிலுக்கு அருகிலும் மற்றும் ரூ.100 டிக்கெட் கவுண்டருக்கு அருகிலும் மொபைல் டாய் லெட்கள் அமைக்க ஆகம விதிகளுக்குட்பட்டு சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.
கோவிலில் மூலவருக்கு மூன்று காலங்களிலும் நடைபெறும் அபிசேகத்தின் போது பக்தர்கள் அமர்ந்து பார்க்கும் முறையினால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க ஆகம விதி மற்றும் கோவில் பழக்க வழக்கங்களின் படி கோயில் விதாயகர்த்தா கருத்துரை பெற்று உற்சவர் விக்கிரகமான குமரவிடங்க பெருமானுக்கு உள்துறையிலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு உள்ள மேடையில் பக்தர்கள் காணும் வகையில் அபிசேகம் நடத்துவதற்கு திட்டத்தினை தயாரித்து பக்தர்கள் அனுமதிச்சீட்டு பெற்று அமர்ந்து தரிசனம் செய்யவும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்தப்பட வேண்டும்.
கோவிலில் அபிஷேகத்தின் போது வெளியிலிருந்து பிளாஸ்டிக் கேன் மூலம் பல லிட்டர் பால் தினமும் கட்டணம் ஏதுமின்றி அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
பக்தர்களிடம் பால் அபிஷேகம் செய்வதாக திரி சுதந்திரர்கள் தாங்களாகவே பிளாஸ்டிக் கேன்களில் கொள்முதல் செய்து சன்னதிக்குள் கொண்டுவந்து பூஜை செய்யும் போத்தி மூலம் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சுவாமியின் பீடத்தின் அருகிலேயே பால் கேன்களில் பிடித்து அபிஷேக பிரசாதமாக திரிசுதந்திரர்களிடம் திரும்ப வழங்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதால், இதனை பிற கோவில்களில் உள்ளவாறு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்ய வேண்டுமெனில் அதற்குரிய கட்டணத்தை நிர்ணயம் செய்து கோவில் திட்டப்படி ஒரு அபிஷேகத்திற்கு 50 லிட்டர் பசும் பாலை கோவில் மூலமே கொள்முதல் செய்து அபிஷேகம் செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தற்போது ரூ.100 மற்றும் பொதுவரிசை இணைந்து ஒரே வரிசையாக பக்தர்கள் தரிசனம் செய்வதால், மூலவருக்கு எதிர்புறம் வரும் வழியில் மயில் தேவருக்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் அமைப்பு மேடும் பள்ளமாக உள்ளதை சரியான முறையில் சரிவு வாக்கில் மரப்பலகைகள் அமைப்பு கொண்டு சரிசெய்யப்பட வேண்டும், மகாமண்டபத்தில் தேங்காய் உடைக்கும் இடத்தை மாற்றி இரண்டாம் பிர காரத்தில் பழைய உள்துறை அலுவலகம் அருகில் இடம் தேர்வு செய்து தேங்காய் உடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடப்பள்ளி அருகில் வைக்கப்பட்டுள்ள வீல்சேர் மற்றும் தூக்குபடுக்கை வைக்கப்பட்டுள்ள விவரத்தினை பக்தர்களுக்கு நன்கு தெரியும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும், கோயிலுக்குள் அவ்வப்போது குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி சுத்தம் செய்யவும், சிலைகள் பாதுகாப்பு அறையில் தூசு படிவதை தடுக்க கண்ணாடியிலான அமைப்பு ஏற்படுத்திடவும், ஏற்கனவே ஆணையர் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சிலைகள் பாதுகாப்பு அறையின் முகப்பும் அமைக்கப்பட வேண்டும்.
இந்த கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது, அன்னதான கூடமாக தற்காலிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் செய்யும் இடம் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும், கோவிலில் அன்னதானத்திற்காக தினந்தோறும் தேவைப்படும் சமையல் பொருட்களை அடுக்கி வைப்பதற்காக பலசரக்கு சாமான்கள் பாதுகாப்பு அறை உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
கோவிலில் உள்ள அன்னதான கூடத்தில் பக்தர்கள் உணவருந்துவதற்கு காத்திருக்கும் வேளையில் பக்தர்கள் பக்தி நிகழ்வுகளை கண்டுகளிப்பதற்காக அகன்ற திரை கொண்ட எல்.இ.டி. டி.வி. பொருத்த வேண்டும், கோயிலுள்ள அன்னதான கூடத்தில் பக்தர்கள் உணவருந்துவதற்கு செல்லும் நுழைவு வாயில் அருகிலும் அதிக அளவில் பக்தர்கள் உணவருந்தி விட்டு வெளியேறும் இடத்திலும் அமைக்கப்பட்டுள்ள கை கழுவுவதற்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் குழாய்கள் கூடுதலாக பொருத்தவும், முடிகாணிக்கை மண்டபத்தில் “முடிகாணிக்கை செய்ய கட்டணம் கிடையாது” என்ற வாசகம் பொருந்திய டிஜிட்டல் போர்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைக்கப் பட வேண்டும்.
மேலும் முடிகாணிக்கை மண்டபத்தில் பணியில் இருக்கும் பணியாளர்கள் இலவச கட்டணச்சீட்டு வழங்கும் போதே “முடி காணிக்கை செய்ய கட்டணம் இல்லை“ என்று தெரிவிக்க வேண்டும். ஒலிப்பெருக்கி மூலம் அவ்வப்போது அறிவிக்க வேண்டும்.
முடிகாணிக்கையின் போது பணியாளர்கள் பக்தர்களிடம் தொகை பெறுவதை கண்காணித்து தொகை பெறும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு ரூ.1 கட்டணச்சீட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கட்டணச் சீட்டை இரத்து செய்து பக்தர்களை இலவசமாக அனுமதிக்க ஆணையர் அனுமதி பெற்று செயல்பட வேண்டும்.
பக்தர்கள் நீராடி விட்டு விரைந்து செல்வதற்கு பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். நீராடி விட்டு வரும் பெண்கள் உடை மாற்றுவதற்காக உள்ள அறையில் கூடுதல் டியூப் லைட்கள் பொருத்த வேண்டும். பெண்கள் உடை மாற்றும் அறையின் முகப்பில் மறைப்பு ஏற்படுத்த வேண்டும்.
கோவில் வளாகத்தில் வேத பாடசாலைக்கு டிஜிட்டல் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும், பாடசாலையை தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும், புதிய மாணவர் சேர்க்கைக்கு விளம்பரப்படுத்தி மாணவர்களை சேர்த்திட நடவடிக்கை எடுக்கவும், அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் உள்ள 14 கழிப்பறைகளில் ஒரு பக்கம் உள்ள ஏழு கழிப்பறைகளை நவீனப்படுத்தியும், மறுபுறம் உள்ள ஏழு கழிப்பறைகளையும் குளியல் அறைகளாக மாற்றவும் வேண்டும்.
பயிற்சி மாணவர்கள் தங்கும் முதல் தளத்தில் கூடுதல் குளியலறைகள் ஏற்படுத்தவும், படுக்கை அறைகளில் கூடுதல் மின்விசிறி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு உணவு சமைக்கும் சமையலறைகளை புதியதாக கட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், கோவிலில் உள்ள யானை இயற்கை சூழலில் நடந்து செல்வதற்கேற்ப சரவணபொய்கை வளாகத்தில் மண்தரை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோயில் இணை ஆணையர், செயல் அலுவலருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.