அரசியலில் பிஸியாக இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் என்றாலே ஆக்ரோஷமான பேச்சும், தீவிரமான முகம் மட்டுமே பலருக்கும் முதலில் நினைவுக்கு வரும். அதையெல்லாம் தாண்டி, சந்தோஷமான திருமாவளவன் எப்படி இருப்பார் பாருங்கள் என்று காட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.
1990களில் அம்பேத்கர் நூற்றாண்டுக்கு பிறகு, தலித் அரசியல் புதிய பாய்ச்சலை அடைந்தது. அப்போது, பல தலித் அரசியல் இயக்கங்கள் தோன்றி பணியாற்றியது. அதில், தலித் பேந்தர் ஆஃப் இந்தியா என்று அமைப்பின் தலைவரான திருமாவளவன், கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றி வருகிறார். தலித் பேந்தர் ஆஃப் இந்தியா அமைப்பு பின்னர் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் என்று மாற்றம் அடைந்து இன்றைக்கு தமிழ அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக உருவெடுத்துள்ளது. விசிகவில் இன்று 4 எம்.எல்.ஏ.க்கள் 2 எம்.க்கள் உள்ளனர். இதில் திருமாவளவன் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக உள்ளார். திருமாவளவன் என்றாலே பொதுவாக அவருடைய ஆக்ரோஷமான பேச்சும், உணர்ச்சிகரமான சீற்றம் மிக்க உரையும் தான் பலருக்கு முதலில் நினைவுக்கு வரும். 50களில் உள்ள திருமாவளவன், இப்போதெல்லாம், மிகவும் நிதானமாகவும் பொறுப்புடனும் அறிவுப்பூர்வமாகவும் அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டாலும் அவருடைய அந்த ஆக்ரோஷமான முகமும் தீவிரமான முகமுமே இன்னும் முதல் முகப்பதிவாக இருக்கிறது. அதனாலேயே, சந்தோஷமான திருமாவளவன் எப்படியிருப்பார் என்று பார்க்க ஆவலாக இருக்கலாம். அப்படி ஒரு சந்தோஷமான தருணத்தில் எடுக்கப்பட்ட விடியோவை திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழக அரசியலில் பிசியாக இருக்கும் திருமாவளவன், இன்று சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கே திருமாவளவன் உடன் மாணவிகள் கூட்டமாக ஒரு செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்டுள்ளனர். அதில், மாணவிகள் பட்டாளம் உற்சாகத்தில் ஆர்பரிக்க, திருமாவளவன் சந்தோஷத்தில் மிதந்துள்ளார். இந்த வீடியோவை, பார்க்கும் எவரும் இவ்வளவு சந்தோஷ திருமாவளவனை இதற்கு முன் எங்காவது பார்த்தீர்களா? இப்போ இதோ பாருங்கள் என்றுதான் கூறுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”