கர்நாடகத்தில் மறைமுகமாக கலவரத்தை ஊக்குவிக்கும் காங்கிரஸ்: எடியூரப்பா குற்றச்சாட்டு

உப்பள்ளி:

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உப்பள்ளியில் கலவரம் நடந்துள்ளது. இதன் பின்னணியில் அதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் அமைப்பின் தலைவர் தான் இருந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். 12 போலீசார் காயம் அடைந்துள்ளனர். இத்தகையவர்களை அப்பாவிகள் என்று கூற முடியுமா?.

ஆனால் தவறு செய்தவர்களை போலீசார் கைது செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், அப்பாவிகளை கைது செய்ய கூடாது என்று கூறுகிறார்கள். இதன் மூலம் கர்நாடகத்தில் கலவரத்தை காங்கிரசார் மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள் என்று நினைக்க தோன்றுகிறது. பெங்களூருவில் இருந்து கொண்டு பேசுவது சரியல்ல. அவர்கள் உப்பள்ளிக்கு வந்து சம்பவம் நடந்த பகுதிகளை பார்க்க வேண்டும்.

மடங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை பெற 30 சதவீத கமிஷன் வசூலிக்கிறார்கள் என்று மடாதிபதி திங்கலேஸ்வரா சுவாமி கூறியுள்ளார். அவரிடம் ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் அதை வழங்க வேண்டும். அவ்வாறு ஆதாரங்களை வழங்கினால் அரசு விசாரணை நடத்தும். எந்த ஆதாரமும் இல்லாமல் மடாதிபதியாக இருப்பவர் அரசு மீது கமிஷன் புகார் கூறுவது சரியல்ல.

வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும். எங்கள் கட்சி சொந்த பலத்தில் ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் பலவீனமாகிவிடும். உப்பள்ளி சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலவரத்தை தூண்டும் வகையில் கருத்தை பதிவிட்ட நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனால் போலீஸ் மந்திரி சரியாக செயல்படவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர் சிறப்பான முறையில் தனது பணியை மேற்கொண்டு வருகிறார். அதே நேரத்தில் அமைதியை நிலைநாட்ட அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதையும் படிக்கலாம்…அமெரிக்கா செல்ல இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்படும்: தூதரகம் அறிவிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.