ஒரே நாளில் மூவர் பலி: கழிவுநீர்த் தொட்டிக்குள் மூச்சை விடும் மனிதர்கள் – இந்திய அளவில் தமிழகம் 2-வது இடம்

சென்னை: கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது அதிகம் பேர் மரணம் அடைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 43 பேர் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் விதிகளின்படி தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கும், கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கும் மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து கூறி வந்தாலும், தமிழகத்தின் ஏதோ ஒரு பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டு உள்ளன. இப்படி கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் 3 பேர் விஷவாயு மரணம் அடைந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை மாநகராட்சி 70-வது வாட்டில் உள்ள மாநகராட்சி பம்மிங் ஸ்டேஷனில் ஒப்பந்த பணியாளர்கள் லட்சுமணன், சிவகுமார், சரவணன் ஆகியோர் இன்று காலை (ஏப்.22) கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், 3 பேரும் எதிர்பாராத விதமாக கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்தார். தொட்டிக்குள் விழுந்த அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் வந்து நீண்ட போராட்டத்திற்கு பேரையும் சடலமாக மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவத்தில் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ், லோகநாதன், உரிமையாளர் விஜயானந்த் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் போதிய மின்விளக்கு வசதி இல்லாமலும், உரிய மேற்பார்வை இன்றியும் பணி செய்ததாலேயே உயிரிழப்பிற்கு காரணம் என மதுரை மாநகராட்சி இளநிலை பொறியாளர் சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணம் ஏற்பட்ட வழக்கு பதிவு செய்து, இழப்பீடு வழங்கப்பட்டாலும், மறுபுறம் இதைத் தடுக்க கடுமையாக நடவடிக்கை எடுக்கபடாத காரணத்தால் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 43 பேர் இதுபோன்ற விபத்துகளில் மரணம் அடைந்துள்ளனர்.

2017 ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை கழிவு நீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும்போது மரணம் அடைந்தவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி நாடு முழுவதும் 325 பேர் மரணம் அடைந்துள்ளர். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 52 மரணம் அடைந்துள்ளனர். அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 43 பேரும், டெல்லியில் 42 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

ஆனால், உத்தரப் பிரதேசத்தில் 27 பேருக்கும், டெல்லி 37 பேருக்கு மட்டுமே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மரணம் அடைந்த அனைவரின் குடும்பத்துக்குமே ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்குவதில் தமிழக அரசு விரைவாக வழங்கி இருந்தாலும், இதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைதான் இந்தத் தொடர் மரணங்கள் உணர்த்துகிறது. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவாகரத்துறை வழங்கியுள்ளது. இதில் இயந்திரங்களை பயன்படுத்திதான் கழிவுநீர்த் தொட்டிகைளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், மனிதர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதையும் மீறி மனிதர்களைப் பயன்படுத்துவதால் தான் இதுபோன்ற மரணங்கள் ஏற்படுகின்றன.

வரும் காலங்களிலாவது தூய்மை இந்தியா உள்ளிட்ட திட்டங்களை நிதியைக் கொண்டு நவீன இயந்திங்களை வாங்கி, இந்தப் பணியில் ஈடுபடுத்தினால் மட்டுமே கழிவுநீர்த் தொட்டிக்குள் மனிதர்கள் மரணம் அடைவதை தடுக்க முடியும்.

விதிமுறைகளை காண: http://cpheeo.gov.in/upload/5c0a062b23e94SOPforcleaningofSewersSepticTanks.pdf

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.