காங்கிரஸ் கட்சியில் ஏன் இணையவில்லை: பி.கே., விளக்கம்!

காங்கிரஸ்
தலைவர் சோனியா தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், கலந்து கொண்ட தேர்தல் உத்தியாளர்
பிரஷாந்த் கிஷோர்
, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு காங்கிரஸ் கட்சிக்கான ஒரு செயல்திட்டத்தை பற்றி விளக்கினார்.

பிரஷாந்த் கிஷோர் முன்வைத்த திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைக்கும் குழு கவனித்து இறுதி முடிவை ஒரு வாரத்தில் கட்சி தலைவரிடம் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இக்குழுவானது கட்சித் தலைமைக்கு தனது அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது. இதனிடையே, பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியானது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரது பேச்சுகளும் இதனை உறுதி செய்யும் வகையில் இருந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்து விட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். “பிரசாந்த் கிஷோர் உடனான ஆலோசனை மற்றும் அவர் அளித்த செயல்திட்டத்தையடுத்து, 2024 ஆம் ஆண்டுக்கான அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை சோனியா காந்தி அமைத்தார். வரையறுக்கப்பட்ட பொறுப்புடன் கூடிய அக்குழுவின் ஒரு பகுதியாக அவரை கட்சியில் சேர சோனியா அழைப்பு விடுத்தார். ஆனால், பிரஷாந்த் கிஷோர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். கட்சியில் சேராவிட்டாலும் அவர் வழங்கிய ஆலோசனைகளுக்கு நன்றி.” என்று ரந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சிக்கு தன்னை விட தலைமையே முக்கியம் என்று பிரபல தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவின் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் சேரவும் மற்றும் தேர்தலுக்கு பொறுப்பேற்கவும் அக்கட்சியின் வாய்ப்பை நான் நிராகரித்து விட்டேன். எனது தாழ்மையான கருத்துப்படி, காங்கிரஸ் கட்சியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு பிரச்சனைகளை சீர்திருத்தங்கள் மூலம் சரி செய்ய வேண்டும். அதற்கு என்னை விட அக்கட்சிக்கு தலைமையும், கூட்டு விருப்பமுமே முக்கியம்.” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.