இலங்கை மக்களுக்கு வழங்க உயர்ரக அரிசி குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிக்கையில், இலங்கை அரசு ஏற்கனவே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ள அரிசிக்கு இணையாக, ஆந்திரா பொன்னி, ஏடிட்டி உள்ளிட்ட உயர்ரக அரிசியை போக்குவரத்து செலவு உட்பட கிலோ ஒன்றுக்கு 33ரூபாய் 50 காசுகள் என்ற குறைந்த விலையில் கொள்முதல் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவரம் தெரியாமல் சிலர் இந்திய உணவு கழகத்திடம் இருந்து ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு வாங்காமல், அதிக விலை கொடுத்து வாங்குவதாக தவறான பிரச்சாரம் செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய உணவு கழகத்திடம் இருந்து 20 ரூபாய்க்கு வாங்கப்படும் அரிசி பொது விநியோக திட்டத்தில் அதாவது ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி என்பதால், அதனை வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.