அசாமில் வெள்ளப் பெருக்கு; 222 கிராமங்கள் நீரில் மூழ்கின

கவுகாத்தி: கடந்த சில நாள்களாக அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா, அருணாசலப் பிரதேசம் ஆகியவற்றில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோபிலி நதியின் நீர் அளவு வெள்ள அபாயத்தை தாண்டியுள்ளது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘காம்ரூப், நாகோவன், கர்பி அங்லாக், ஹோஜாய், தீமாஜி, சச்சார் ஆகிய ஆறு மாவட்டங்களின் 222 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன இதன் காரணமாக சுமார் 25 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,0321 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 57,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைவிடாத மழையால் திமா ஹசாவ் மாவட்டத்தில் 12 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் பாதை, பாலங்கள் மற்றும் சாலை தகவல் தொடர்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், துணை ராணுவப் படைகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் மீட்பு படையினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டிடோக்செரா ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த சுமார் 1,245 பயணிகள் பதர்பூர் மற்றும் சில்சார் வரை கொண்டு வரப்பட்டுள்ளனர்.  119 பயணிகள் விமானப்படை விமானம் மூலம் அனுப்பப்பட்டதாக ரயில்வேத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.