தினத்தந்தி சி.பா. ஆதித்தனாரின்  பாராட்டு பெற்ற பத்திரிகையாளரான சண்முகநாதன்  அவர்களுக்கு எனது  வாழ்த்துகள் – மருத்துவர் இராமதாஸ்.!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் 1953-ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள்வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்துவருகிறார்.

பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனை ஆகும். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருப்பவர் என்பதோடு, சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூக நீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார் சண்முகநாதன்.

அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, தினத்தந்தி குழுமத்தினால் வெளியிடப்பட்ட ‘வரலாற்றுச் சுவடுகள்’ நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றைப் பார்க்க உதவுகிறது.

இந்த நிலையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும், ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழை, 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்துவரும் சண்முகநாதன் அவர்களுக்கு நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்க உள்ளார். 

இந்நிலையில், கலைஞர் எழுதுகோல் விருது பெறும் முதுபெரும் பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் அந்த வாழ்த்துச் செய்தியில், “தமிழக அரசின் கலைஞர் எழுதுகோல் விருதை முதன்முதலாக பெற மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தினத்தந்தி சி.பா. ஆதித்தனாரின்  பாராட்டு பெற்ற பத்திரிகையாளரான சண்முகநாதன்  அவர்களுக்கு எனது  வாழ்த்துகள்” என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.