உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி; வளர்ந்த நாடுகள் பூமியின் வளங்களை சுரண்டுகின்றன! பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடந்த ‘மண் பாதுகாப்போம் இயக்கம்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ‘சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்தியா எடுத்துள்ள முயற்சிகள் பன்முகத்தன்மை கொண்டவை. உலகின் மிகப்பெரிய நாடுகள், பூமியின் வளங்களை மேலும் மேலும் சுரண்டுவது மட்டுமல்லாமல், அதிக கரியமில வாயுக்களையும் வெளியேற்றி வருகின்றன. இந்த ஆண்டு பட்ஜெட்டில், கங்கைக் கரையோர கிராமங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இயற்கை விவசாய நடைபாதையை உருவாக்கவும் முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் விவசாய நிலங்களை ரசாயனமற்றதாக மாற்ற முடியும். நமது விவசாயிக்கு, தன்னுடைய மண்ணின் தரம் என்ன?, மண்ணில் என்ன குறைவு, எவ்வளவு குறைவு? போன்ற விபரங்கள் தெரியாமல் இருந்தது. இந்த பிரச்னையை போக்க, விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. மழைநீரை சேமிக்கவும், பாதுகாக்கவும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் நாட்டிலுள்ள 13 முக்கிய நதிகளை பாதுகாக்கும் பிரசாரமும் தொடங்கியது. இதன்மூலம் நீர் மாசுபாட்டைக் குறைக்கவும், நதிகளின் கரையோரங்களில் காடுகளை வளர்க்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மண்ணைக் காக்க ஐந்து முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளோம். அதாவது, மண்ணை ரசாயனமற்றதாக மாற்றுவது எப்படி?, மண்ணில் வாழும் உயிரினங்களை எவ்வாறு காப்பாற்றுவது?, மண்ணின் ஈரப்பதத்தை எவ்வாறு பராமரிப்பது?, நிலத்தடி நீர் குறைவதால் மண்ணில் ஏற்படும் பாதிப்பை எவ்வாறு நீக்குவது? மண் அரிப்பு ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது? ஆகியன குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.