புதுடெல்லி: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் (சிபிடிடி) சங்கீதா சிங் தெரிவித்துள்ளார்.
ரிட்டர்ன் தாக்கல் செய்வது எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த நிதி ஆண்டில் ரிட்டர்ன் தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 7.14 கோடி. அதற்கு முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 6.9 கோடியாக இருந்தது.
பொதுவாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்றம் பெறும் போது வரி செலுத்துவோரின் விகிதம் அதிகரிக்கும். வரி வருமானமும் உயரும் என்று அவர் சுட்டிக் காட்டினார். பொருளாதார நடவடிக்கை அதிகரிக்கும்போது மக்களின் வாங்கும் திறனும் உயரும், பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சி இல்லாவிடில் வரி வருமானம் உயர வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார். அதேசமயம் வரி வசூல் அளவும் அதிகரித்து வருவதை துறை நன்கு உணர்ந்துள்ளது. பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் ஆன்லைன் மூலமாக வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வது அதிகரித்தது. அத்துடன் உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்ற தகவலும் வரி செலுத்துவோர் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆன்லைனில் வரி செலுத்த வசதியாக கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை வலுவாக்கி உள்ளோம் என்று குறிப்பிட்டார். 2022-ம் நிதி ஆண்டில் வரி வசூல் ரூ. 14 லட்சம் கோடியாகும். இது 2020-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும் என்றார்.