“சினிமா தியேட்டர்னு நினைச்சு வந்தீங்களா?'' – ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கண்டித்த நீதிபதி! என்ன நடந்தது?

”இது என்ன சினிமா தியேட்டரா? கோர்ட்டுக்கு எப்படி டிரஸ் பண்ணிக்கிட்டு வரணும்னு உங்களுக்கு டிரெய்னிங்கில் சொல்லிக் கொடுக்கலையா?” என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை நீதிபதி கடுமையாகக் கண்டிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கோர்ட் நடைமுறைகளை இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருப்போம். கொரோனா காலத்தில் நிறைய நீதிமன்றங்கள் ஆன்லைனில் விசாரணை நடத்தின. சில விசாரணைகள் இணையதளத்தில் ஒளிபரப்பாகின்றன. அதனால் பல சுவாரசியக் காட்சிகளை மக்கள் பார்க்க முடிகிறது. அப்படித்தான் இதுவும் வைரலானது.

பீகார் மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக இருக்கிறார் ஆனந்த் கிஷோர். மூத்த ஐ.ஏ.எஸ் அதிௐகாரியான இவர், சாதாரண பேன்ட்-வெள்ளைச் சட்டையுடன் ஒரு விசாரணைக்காக பாட்னா உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதி பஜன்த்ரி இவரின் உடையைப் பார்த்ததும் கோபமாகிவிட்டார்.

”முசௌரி பயிற்சி மையத்துக்கு நீங்கள் போனீர்கள்தானே? அங்கு இதையெல்லாம் சொல்லித் தரவில்லையா?” என்று மீண்டும் கேட்டார். அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எதுவும் புரியாமல், சுற்றியிருந்த வக்கீல்களைப் பார்த்தார்.
”இது என்ன சினிமா தியேட்டரா? பீகார் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு என்ன ஆனது? கோர்ட்டுக்கு எப்படி வர வேண்டும் என்பதுகூடத் தெரியவில்லை. கோட் அணிந்திருக்க வேண்டும், சட்டை காலர் திறந்திருக்கக்கூடாது” என்று நீதிபதி விளக்கினார். ”இது கோடைகாலம் என்பதால் கோட் அணியவில்லை” என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சொல்ல, மீண்டும் கோபமாக அவரைக் கண்டித்தார் நீதிபதி.

சமூக வலைதளங்களில் இதுபற்றி காரசாரமாக விவாதங்கள் நடக்கின்றன. ‘வழக்கை விசாரிக்காமல், அதிகாரியின் உடையைப் பற்றிப் பேசி கோர்ட் நேரத்தை நீதிபதி வீணடிக்கலாமா?’ என்று சிலர் கேட்க, ‘ஒரு மூத்த அதிகாரி கண்ணியமாக உடை அணியாமல் வந்து, நீதிபதியுடன் வாதம் செய்யலாமா?’ என்று வேறு சிலர் கேட்கிறார்கள்.
ராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு யூனிஃபார்ம் எதுவும் இல்லை. அதேபோல, ‘இப்படித்தான் உடை அணிந்திருக்க வேண்டும்’ என்று எந்த விதியும் இல்லை. ‘கண்ணியமாக ஃபார்மல் உடை அணிந்திருக்க வேண்டும்’ என்று மட்டும் அவர்களுக்கான நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் பணிகளில் இருப்பவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ‘ஜெனரல் புக் சர்க்குலர்’ என்ற சுற்றறிக்கை தெளிவுபடுத்துகிறது. குடியரசு தின விழா போன்ற அரசு நிகழ்ச்சிகள், நீதிமன்றங்களில் விசாரணைக்காக ஆஜராவது, வி.ஐ.பி வரவேற்பு போன்ற ஒவ்வொன்றுக்கும் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று ஒரு மரபு இதன்படி கடைபிடிக்கப்படுகிறது. பிரதமர், ஜனாதிபதி போன்ற வி.ஐ.பி-க்கள் வரும்போது கோட், சூட் அணிந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அவர்களை வரவேற்க வேண்டும். கூலிங் கிளாஸ் அணியக்கூடாது. கழுத்தும், மார்பும் தெரியாதபடி உடை அணிய வேண்டும் என்பதே மரபு. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்குப் போனார். அப்போது பஸ்தர் மாவட்ட கலெக்டர் அமித் கட்டாரியா, பளீர் நீல நிற சட்டையும் கூலிங் கிளாஸும் அணிந்து அவரை வரவேற்றார்.

அமித் கட்டாரியா

அவர் சட்டையை நீண்ட நேரம் மோடி உற்றுப் பார்த்தார். தாண்டேவாடா மாவட்ட கலெக்டர் தேவசேனாபதி எளிமையாக வெள்ளை சட்டை, கறுப்பு பேன்ட் அணிந்து வரவேற்றார். இரண்டுமே சர்ச்சையானது. ”ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான நடத்தை விதிகளின்படி நீங்கள் நடந்துகொள்ளவில்லை. உங்கள் பணிக்கான கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று இருவருக்கும் மெமோ தரப்பட்டது.

தேவசேனாபதி

உடைகளில்தான் ஒருவரின் மரியாதையும் கண்ணியமும் வெளிப்படுகிறது என்று நம்புவது இந்திய மரபு. அதனால்தான் இப்படியெல்லாம் சர்ச்சைகள் ஏற்படுகின்றன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.