ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்கள்? கவியரசு கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் இருவருக்கும் இன்று பிறந்தநாள்.!

கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இருவருக்கும் இன்று பிறந்தநாள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்த் திரையுலகை ஆளுமை செய்த இவர்களைப் பற்றிய செய்தித் தொகுப்பு உங்களுக்காக…

பாசமலர் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைக் கேட்போருக்கு, இசையைக் கவிதை அலங்கரிக்கிறதா, கவிதையை இசை அலங்கரிக்கிறதா என்ற கேள்வி எழும்..கண்ணதாசன்- விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணியில் உருவானதுதான் மனதை உருக்கும் இந்தப் பாடல்.

இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, துன்பங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடப்போருக்கு உத்வேகமாக இருப்பவை எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல்கள்!

வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும் உண்மையான படைப்புகள் முக்காலத்துக்கும் பொருந்தும் என்பதற்கு உதாரணம் கண்ணதாசன் எழுதிய பாடல்கள்!

தத்துவம்,ஆன்மீகம், காதல்,சோகம், பாசம் என்று எந்த உணர்ச்சியையும் தனது எழுத்தால் உயிர்ப்பிக்க செய்தவர் கண்ணதாசன் என்றால், அதை இசையால் தாலாட்டியவர் எம்.எஸ்.வி.

கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா என்று கண்ணதாசன் கேட்டதுபோல் எம்.எஸ்.வி இசையால் கண்ணதாசன் பாடல் இனித்ததா அல்லது கண்ணதாசன் வரிகளால் எம்.எஸ்.வி. இசைக்கு மெருகேறியதா என வியக்காதார் இருக்க முடியாது.

வாலி,புலமைப்பித்தன்,வைரமுத்து என எத்தனையோ கவிஞர்களின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி இசையமைத்தாலும், கண்ணதாசன் பாடல்கள் தனித்துத் தெரிகின்றன.

இளையராஜா, சங்கர்-கணேஷ், கே.வி.மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்களுக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தாலும், எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல்கள் தனித்துவம் பெற்று விளங்கின.

தமிழ் திரையுலகிற்கு கொடை தந்த இருவரும் ஒரே தேதியில் பிறந்தது ஆச்சரியமான உண்மை. அவர்களின் கைவண்ணத்தில் உருவான பாடல்கள் 50 ஆண்டுகளைக் கடந்தும் கோடிக்கணக்கான மக்களின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.