அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80 ஆக சரிந்திருக்கிறது. இதற்குக் காரணம் மோடி அரசின் தவறானப் பொருளாதாரக் கொள்கைதான் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

குறிப்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடு விரக்தியில் மூழ்கியுள்ளது என்று கூறியது நீங்கள்தானே? அந்தக் காலத்தில் ரூபாய் மதிப்பு சரிவைக்கண்டு எந்த அளவுக்கு சத்தம் போட்டீர்களோ, இன்று அந்த அளவுக்கு மௌனமாக இருக்கிறீர்களே?” என பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்திருக்கிறார். அதே போல முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் “ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்” என்று கூறி விரிவான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
கோபண்ணா, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்:
“மத்திய பா.ஜ.க அரசின் பொருளாதார மேலாண்மையானது கடந்த 8 ஆண்டுகளாகவே சரியான பாதையில் செல்லவில்லை. குறிப்பாக, சர்வதேச சந்தையில் விலை குறையும்போது அந்த பலன் மக்களைச் சென்றடையவிடாமல் தடுத்து, கலால் வரியை 13 முறை உயர்த்தியிருக்கிறது மோடி அரசாங்கம். இதன்மூலம் 23 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்து கஜானாவை நிரப்பியிருக்கிறார்கள். நிரப்பிக்கொண்ட பின்பும்கூட டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 80-ஐ தாண்டியிருக்கிறது. இதனால் தொடர் பாதிப்புகளாக பணவீக்கம், நடப்பு கணக்கில் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை ஏற்பட்டு நாடு மிகப்பெரிய பொருளாதாரப் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இது குறித்து முன்னரே எங்கள் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் எச்சரித்தாலும் அதைக் காதுகொடுத்து கேட்பதற்கு நிதியமைச்சரோ, பிரதமர் மோடியோ தயாராக இல்லை. இவர்கள் யாருடைய ஆலோசனைகளையும் கேட்பதில்லை.

இவர்களுக்கு தெளிவான ஒரு நிதிக்கொள்கை கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு பொருளாதாரப் பாதை இருக்கிறது. அது டாக்டர் மன்மோகன்சிங் அமைத்த பொருளாதாரப் பாதை, புதிய பொருளாதாரக் கொள்கை, எப்படி சர்வதேச நாடுகளில் ஏற்படுகிற பிரச்னைகள் இந்தியாவின் சுயசார்பை பாதிக்காதபடி எப்படி எதிர்கொள்வது என்ற பெரிய அணுகுமுறை அவரிடம் இருந்தது. இந்த அணுகுமுறையெல்லாம் இவர்களிடம் கிடையாது. பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன் சிங், ப. சிதம்பரம், பிரனாப் முகர்ஜி போன்றவர்கள் தங்களின் அனுபவத்தின் அடிப்படையில் இந்தியாவின் பொருளாதார சிக்கல்களை தீர்த்துவைத்தார்கள். அப்படி அறிவுசார்ந்த பொருளாதார ஞானம் பெற்றவர்கள் இந்த ஆட்சியில் யாரும் இல்லை. மோடிக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதார ஞானமோ, அறிவோ இல்லை; பொருளாதாரத்துக்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாத நிர்மலா சீதாராமனை கொண்டுவந்து நிதியமைச்சராக நியமித்திருக்கிறார்கள்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது,` டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 ஆக இருக்கிறது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை 40 ஆக குறைப்போம், காங்கிரஸ் அரசாங்கத்தால் ரூபாய் வீழ்ச்சியை தடுக்க முடியாது ஏனென்றால் அதற்குக் காரணமே காங்கிரஸ் ஆட்சியில் நடைபெறும் ஊழல்தான்’ என குற்றம்சாட்டினார். அப்படியென்றால் இப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ஆக இருக்கிறதே அதற்கு பா.ஜ.க ஆட்சியில் நடக்கிற ஊழல்தான் காரணமா? பொறுப்பற்ற பிரதமரும் நிதியமைச்சரும் நாட்டை பொருளாதாரப் பேரழிவை நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.
நாராயணன் திருப்பதி, தமிழக பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர்:
“அமெரிக்க டாலரை வைத்து மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தை மதிப்பிடுவது மிகவும் தவறு. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்தே, உலகளாவிய பொருளாதார மந்த நிலை நிலவிக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் முழுவதிலும் டாலருக்கு நிகரான பணமதிப்பு வலுவிழந்து, அந்ததந்த நாடுகளின் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரத்தை நாம் திறமாக வைத்திருக்கிறோம் என்பதை நாம் உணரவேண்டும்.

இது ஒரு தற்காலிகப் பிரச்னைதான். இதனால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று சொல்வது வேட்டிக்கையாகத்தான் இருக்கிறது. நிர்வாகத்திறனில்லாத காரணத்தினால் பொருளாதாரம் சரிந்து பல்வேறு நாடுகளில் ஆட்சிக் கவிழ்ந்து மிகப்பெரிய பிரச்னையை சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் நாம் ஒரு நிலையான அரசை, நிலையான பொருளாதாரத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். முதலில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு என்பது நம்முடைய நாட்டினுடைய பொருளாதார தாக்கத்தினால் ஏற்படவில்லை. உலகம் முழுக்க பல நாடுகளின் சரிவுதான் இதற்குக் காரணம் என்பதை பொருளாதாரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், 2008-ல் 1 கோடி ரூபாயாக இருந்த ஒரு நிலம் 2013-ல் 3 கோடியாக உயர்ந்ததுக்குக் காரணம் அவர்கள் தவறானப் பொருளாதாரக் கொள்கைகளைக் கடைபிடித்ததுதான். நாம் கடந்த 8 ஆண்டுகளில் 8.5 லட்சம் கோடி வாரக்கடன்களை பா.ஜ.கவின் பொருளாதாரக் கொள்களைகளால் பெற்றிருக்கிறோம். கட்டமைப்புகளை பெருக்கிக்கொண்டிருக்கிறோம். இறக்குமதிகளைக் குறைத்து தற்சார்பை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இதுபோன்ற செயல்பாடுகளினால் சிறப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்” என விளக்கமளித்தார்.