காங்கோ வன்முறையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. கண்டனம்

நியூயார்க்,

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சிக்குழுக்கள் நாடு முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சிக்குழுக்களை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஐ.நா. கடந்த 10 ஆண்டுகளாக அங்கு தனது அமைதிப்படையை நிறுத்தியுள்ளது. இந்த அமைதிப்படையில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் வன்முறையாளர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி ஐ.நா. அமைதிப்படைக்கு எதிராக காங்கோ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் காங்கோவின் வடக்கு கீவ் மாகாணத்தில் உள்ள புட்டெம்போ நகரில் ஐ.நா. அமைதிப்படைக்கு எதிராக நடந்த மக்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஷிஷூபால் சிங் மற்றும் சன்வாலா ராம் விஷ்னோய் ஆகிய இருவரும், எகிப்து நாட்டை சேர்ந்த வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் காங்கோ வன்முறையில் இந்தியா மற்றும் எகிப்து நாட்டின் அமைதிப்படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த அமைதிப்படை வீரர்களின் குடும்பங்களுக்கும், இந்தியா மற்றும் எகிப்து நாடுகளின் அரசுக்கும், மக்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.