செஸ் விளம்பரம்: “பிரதமர் புகைப்படம் இடம்பெறுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்!" – நீதிமன்றம்

சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்கான தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு (ஜூலை 28) நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

இந்த செஸ் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடும் விதமாகத் தலைநகர் சென்னையிலும், வேறு சில மாவட்டங்களிலும் செஸ் வடிவிலான அலங்காரங்கள், விளம்பரங்கள், கலை நிகழ்ச்சிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.

செஸ் போட்டி தொடக்க விழாவில்…

இந்த நிலையில், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல்செய்தார். அதில், “சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர் என யாருடைய புகைப்படத்தையும் பயன்படுத்தாமல் ஆளும் தி.மு.க அரசு தனக்கான அரசியல் ஆதாயத்தைத் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக்கொண்டுள்ளது.

எனவே, இந்த போட்டிக்கான விளம்பரத்தில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களைச் சேர்க்க வேண்டும். பொதுமக்களின் பணத்தை தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்தி விளம்பரம் செய்ததால் ஆளும் அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

செஸ் விளம்பரத்தில் பிரதமர் படம்

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு, “சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் படங்கள் இடம்பெற வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. எனவே, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்கள் இடம்பெறுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்யவேண்டும்.

மதுரை நீதிமன்றம்

பொதுமக்களின் உணர்வுகளைப் மதிப்பதும், சர்வதேச அளவிலான இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி, அழியாத முத்திரையை பெற்று தருவதும் ஒருங்கிணைப்பாளரின் சிறந்த மன்னிப்பாக அமையும். குடியரசுத் தலைவர், பிரதமரின் படங்கள் விளம்பரத்தில் வைக்கப்படும் போது யாரேனும் அதைச் சேதப்படுத்தினால் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.