போபால்: போபால் நகரில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் விதிகளை மீறி வர்த்தக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து மாநில நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் புபேந்திர சிங் நேற்று தனது ட்விட்டர் பதிவில், “போபால் பிரஸ் காம்ப்ளக்ஸ் பகுதியில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் விதிகளை மீறி வர்த்தக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் புபேந்திர சிங் அளித்த பேட்டியில், “பிரஸ் காம்ப்ளக்ஸ் பகுதியில் போபால் வளர்ச்சி ஆணையம் ஒதுக்கீடு செய்த நிலத்தை வர்த்தக நோக்கில் பயன்படுத்த முடியாது. விசாரணையில் விதிமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுப்போம். கட்டித்துக்கு ‘சீல்’ வைப்போம்” என்றார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை உடனான குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கும்போது, “குத்தகை ரத்து செய்யப்பட்டுள்ள விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. முழு விவரங்களையும் வழக்கின் நிலையையும் கேட்டுள்ளோம். தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்வோம். தேவையில்லை என்றால் நேரடியாக நடவடிக்கை எடுப்போம்” என்றார். நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் ம.பி. அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.