அயோத்தி – நரசிங்கர் கோயில் மட உரிமை விவகாரம்: 2 துறவிகள் மோதல், குண்டு வீச்சு சம்பவத்தால் பரபரப்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இரண்டு துறவிகள் மோதலில் குண்டு வெடித்தது. அங்குள்ள நரசிங்கர் கோயில் மடத்தை சொந்தம் கொண்டாடுவதில் ஏற்பட்ட மோதலில் கலவரம் ஏற்பட்டுள்ளது.

ராமர் கோயில் கட்டப்படும் அயோத்தி நகரத்தின் ராய்கன்ச் பகுதியிலுள்ளது நரசிங்கர் கோயில். பழமையான இக்கோயிலில் நேற்று மாலை திடீர் என குண்டு வெடித்தது. இதனால், இது தீவிரவாதிகள் தாக்குதல் என அஞ்சி அப்பகுதிவாசிகள் போலீஸில் புகார் செய்தனர்.

நேரில் வந்து பார்த்த போலீஸார் இக்கோயிலின் மீது உரிமை கொண்டாடும் மோதலில் இரண்டு துறவிகள் மோதியது தெரிந்துள்ளது. நரசிங்கர் கோயில் மடத்தின் தலைவராக ராம் சரண் தாஸ் உள்ளார். இவருடன் கோயில் பூசைக்காக துறவியான ராம் சங்கர் தாஸ் இணைந்து மடத்திலேயே தங்கியுள்ளார். பிறகு துறவி ராம் சங்கருக்கு இருந்த சமூக விரோதிகளை அவ்வப்போது கோயிலுக்கும் அழைத்து வந்து உபசரித்துள்ளார். இதை மடத்தின் தலைவர் ராம் சரண் எதிர்க்கவே, அக்கோயில் மடம் தனது எனக் கூறி அவரை வெளியேற உத்தரவிட்டுள்ளார் ராம் சங்கர்.

இதனால், இரண்டு துறவிகளுக்கும் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ளது. இதற்காக தனக்கு உதவ வந்த துறவி ராம் சங்கர் மீது அயோத்தி நகரக் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 16-இல் மடத்தின் தலைவர் ராம் சரண் புகார் அளித்துள்ளார். இதில், எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில் நேற்று இந்த துறவிகளது மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில், இரண்டு தரப்பினரும் தாக்கிக் கொண்டதுடன், குண்டு வீச்சு சம்பவமும் நடந்துள்ளது. இதையடுத்து இரண்டு தரப்பு துறவிகளையும், அவர்கள் ஆதரவாளர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றது அயோத்தி நகர போலீஸ்.

கோயிலில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பிரச்சனைக்கிடையே குண்டு வெடித்தது எவ்வாறு என விசாரணையில் ஈடுபட்டு வரும் போலீஸார், இன்னும் எவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை. தற்போது நிலைமை கட்டுக்குள் அடங்கி, நரசிங்கர் கோயிலில் அமைதி ஏற்பட்டு பக்தர்கள் வரவு மீண்டும் தொடங்கிவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.