எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது – செ. உயர்நீதிமன்றம்

போராட்டங்களில் தங்களுக்கான நியாயங்களையும், கோபத்தையும் மக்கள் பலவிதங்களில் வெளிப்படுத்துவது உண்டு. சமீபத்தில் கூட கேரளாவில் குண்டும் குழியுமாக கிடந்த சாலையை சீரமைக்க பலமுறை மனு அளித்தும் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ வரும் நேரம்பார்த்து குண்டும் குழியுமாக கிடந்த அந்த சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து, துணி துவைத்து நூதன முறையில் எதிர்ப்புத் தெரிவித்தார். 

போராட்டங்களின் கோரிக்கைகளை நூதனமாக தெரிவிக்க எத்தனையோ முறைகளை மக்கள் கையாண்டு வரும் நிலையில், விழுப்புரத்தில் எருமை மாட்டிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தை மக்கள் கையிலெடுத்தனர். 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணைநல்லூர் பகுதியில்  பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என்றும் சம்பந்தப்பட்ட தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 
 
ஆனால்  மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி காவல்துறைக்கு விண்ணப்பம் அளித்துள்ளார். அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்ததால், நீதிமன்றம் வரை சென்று மனு அளித்தார் முத்து. அந்த மனுவில், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி சதீஷ்குமார், ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது எனவும், எருமை மாட்டை காலை முதல் மாலை வரை நிற்க வைத்து   போராட்டம் நடத்துவது மிருக வதை  தடைச் சட்டத்தை மீறிய செயல் என்பதால், எருமை மாட்டுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

அப்போது, விலங்குகளை பயன்படுத்தாமல் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதை அடுத்து, போராட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலித்து வழக்கமான நிபந்தனைகளுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி காவல்துறைக்கு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.