சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 11 நகரங்களில் மொத்தம் ரூ.16,914 கோடி செலவில் 714 பணிகள் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நகரத்திற்கும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடி நிதி வழங்கப்படும். இதைப்போன்று மாநில அரசு ரூ.500 கோடி நிதி வழங்க வேண்டும். இவை இரண்டும் சேர்த்து ரூ.1000 கோடிக்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்தின் படி நகரின் ஒரு பகுதியை தேர்வு செய்து அந்த பகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் பகுதியாக மாற்றுதல், நகரில் பொதுமக்கள் தொடர்புடைய பல்வேறு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதைத் தவிர்த்து நடைபாதைகள் அமைத்தல், இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
இதன்படி தமிழகத்தில் மொத்தம் 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் 2013 ஆம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தொடங்கப்பட்டு, தற்போது 7 ஆண்டுகளை நிறை செய்துள்ளது. இந்த 7 ஆண்டுகளில் தமிழகத்தில் 714 திட்டங்களுக்கு ரூ.16,914 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.9,758 கோடி மதிப்பீட்டில் 348 பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ. 7,155 கோடி செலவில் 366 பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதில் சென்னையில் ரூ. 1,096 கோடியும், கோவை ரூ.1,183 கோடியும், ஈரோடு ரூ.1,304 கோடியும், மதுரை ரூ.1,899 கோடியும், சேலம் ரூ.1,010 கோடியும், தஞ்சாவூர் ரூ. 1,003 கோடியும், தூத்துக்குடி ரூ.1,061 கோடியும், திருச்சி ரூ.1,547 கோடியும், நெல்லை ரூ.1,844 கோடியும், திருப்பூர் ரூ.2,869 கோடியும், வேலூர், ரூ.2,094 கோடி நிதியை பயன்படுத்தியுள்ளது.