“திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தை உச்ச நீதிமன்றம் தோலுரித்து காட்டியுள்ளது” – சி.வி.சண்முகம்

புதுடெல்லி: “ஓர் அரசியல் கட்சியின் அலுவலகத்தை அரசு இப்படி முடக்கினால், அந்த அரசியல் கட்சியால் எப்படி இயங்க முடியும்? இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமான ஒரு செயல்” என்று அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அதுகுறித்து அவர் மேலும் கூறியது: “அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சீலை அகற்றவும் கட்சி அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 22.7.22 அன்று அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சொன்ன கருத்து முக்கியமானது. ஆளும் திமுக அரசுக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி. திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தை உச்ச நீதிமன்றம் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

“ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை அரசு இப்படி முடக்கினால், அந்த அரசியல் கட்சியால் எப்படி இயங்க முடியும்? இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமான ஒரு செயல்” என்று உச்ச நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தனிநீதிபதியின் உத்தரவு செல்லும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், மாவட்ட வருவாய் அதிகாரி, தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டிருக்கிறார் எனக் கூறி உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.