பனாஜி: கோவா மாநில காங்கிரஸ் கட்சி கூண்டோடு காலியாகிவிட்டது. அம்மாநிலத்தில் 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவிவிட்டனர்.
காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்றுள்ள மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் உட்கட்சி மோதல்களால் கோவாவில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
காங்கிரஸ் கோஷ்டி பூசல்களால் ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜகதான் ஆதாயம் அடைந்து வருகிறது. அண்மையில் கோவா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
கோவா சட்டசபை நிலவரம்
40 இடங்களைக் கொண்ட கோவா சட்டசபையில் ஆட்சி அமைக்க 21 எம்.எல்.ஏக்கள் தேவை. சட்டசபை தேர்தலில் பாஜக 20 இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்களிலும் வென்றது. ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் கோவாவில் கணக்கை தொடங்கியது. அக்கட்சிக்கு 2 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர்.

சத்தியம் வாங்கிய ராகுல் காந்தி
கோவா தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட மமதாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. சுயேட்சைகளின் ஆதரவுடன் கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.கோவாவில் கடந்த காலங்களைப் போல சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறிவிடக் கூடாது என்பதற்காக அவர்களிடம் சத்தியம் வாங்கியது காங்கிரஸ் மேலிடம். இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் அக்கட்சி மேலிடம் இருந்து வந்தது.

தாவிய 8 எம்.எல்.ஏக்கள்
ஆனால் கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு பாஜகவுக்க தாவப் போவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் பரபரப்பை கிளப்புகிற வதந்திகள் என இந்த விவகாரம் ஓய்ந்துவிடும். இம்முறை அப்படி எல்லாம் ஓயவில்லை. புலி வருது புலி வருது கதையாக இம்முறை புலி வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் இன்று பாஜகவுக்கு தாவிவிட்டனர்.

சட்டசபையில் வெறும் 3 எம்.எல்.ஏக்கள்
இன்று காலை 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் மற்றும் முதல்வர் பிரமோத் சாவத்தை சந்தித்தனர். அப்போதே கோவா பாஜக தலைவர் சதானந்த் தானவடே, 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணைய உள்ளனர் என்றார்.இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான திகம்பர் காமத் தலைமையில் 8 எம்.எல்.ஏக்களும் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்துவிட்டனர். தற்போது கோவா சட்டசபையில் காங்கிரஸுக்கு வெறும் 3 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர்.