ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்துக்கு 4 வாரங்கள் கெடு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ.யின் மேல்முறையீட்டு மனுவுக்கு 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், கடந்த 2007ம் ஆண்டு ஒன்றிய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவருடைய கணவர் பீட்டர் முகர்ஜியின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு நேரடி நிதியை பெறுவதற்கு முறைகேடாக அனுமதி அளித்ததற்கு லஞ்சம் பெறப்பட்டதாகவும், சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் மூலம் இந்த தொகை கைமாறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கின் ஆவணங்களை சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு வழங்கும்படி, சிபிஐ.க்கு டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. அதில், உயர் நீதிமன்ற உத்தரவு தடை விதிக்கும்படி கோரப்பட்டு உள்ளது.இதை நேற்று விசாரித்த நீதிபதிகள், சிபிஐ மனுவுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.