உத்தவ் அணிக்கு தீப்பந்தம் சின்னம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

மும்பை: உத்தவ் தாக்கரேவுக்கு தீப்பந்தம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுபோல், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என்ற கட்சி பெயருக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். இதற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வில் அம்பு சின்னத்தை இருதரப்புக்கும் வழங்காமல், தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை இரவு தற்காலிகமாக முடக்கியது.  

விரைவில் நடக்க உள்ள இடைத்தேர்தலை சந்திப்பதற்கு மாற்று ஏற்பாடாக புதிய கட்சி பெயர், சின்னத்தை கேட்கும்படி உத்தரவிட்டது. இதன்படி தங்கள் அணிக்கு உதயசூரியன், திரிசூலம் அல்லது தீப்பந்தம் சின்னம் வழங்குமாறு உத்தவ் கோரினார். இந்த கோரிக்கை மீது தேர்தல் ஆணையம் நேற்று முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதில், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அணிக்கு சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என்ற கட்சி பெயரை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. உத்தவ் அணிக்கு தீப்பந்தம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஷிண்டே தரப்பில் தாக்கல் செய்த சின்னங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டதால், புதிய சின்னங்கள் பட்டியலை இன்று இந்த அணி சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையம் சிவசேனா சின்னத்தை முடக்கியதை எதிர்த்து உத்தவ் அணியினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.