இந்தியாவுக்கு வருகை தர அமெரிக்க நிதி மந்திரிக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு

வாஷிங்டன்,

அமெரிக்காவுக்கு 6 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வாஷிங்டன் டி.சி. நகரில் அந்நாட்டு நிதி மந்திரி ஜேனட் எல்லன்னை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும், நடப்பு சர்வதேச பொதுபொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பரஸ்பர நலன்களுக்கான பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.

இந்த சந்திப்பில், வருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ள இந்திய மற்றும் அமெரிக்க பொருளாதார மற்றும் நிதியுறவு சார்ந்த கூட்டங்களில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு வருகை தரும்படி எல்லன்னுக்கு மத்திய நிதி மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில், அமெரிக்க நிதி மந்திரியாக இந்தியாவில் நடைபெற இருக்கும் பொருளாதார மற்றும் நிதியுறவு கூட்டத்தில், 9-வது நட்புறவு கூட்டத்தில், பங்கேற்க கூடிய தனது முதல் இந்திய பயணம் அமையும் என எல்லன் குறிப்பிட்டு உள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயான உறவானது, ஜனநாயகம் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது என்று உலக நாடுகளுக்கு சான்றுடன் தெளிவாக காட்டப்பட்டு உள்ளது என்றும் எல்லன் தெரிவித்து உள்ளார்.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் இந்த பயணத்தில் ஜப்பான், தென் கொரியா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, பூடான், நியூசிலாந்து மற்றும் ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடனான இருதரப்பு சந்திப்புகளிலும் நிதி மந்திரி பங்கேற்கிறார்.

இதேபோன்று, சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி, ஜி20 நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர் உள்ளிட்டோருடனான ஆண்டு கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.