திருநங்கை மீது தாக்குதல்…. நடவடிக்கை எடுக்கப்படுமென காவல் துறை உறுதி

திருநங்கைகள் தற்போதைய நவீன உலகத்திலும் தீண்டாமையையும், பிறரின் ஏளனப்பார்வையையும் பேச்சையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே வீட்டால் ஒதுக்கப்பட்டவர்களை சமூகமும் ஒதுக்கும் அவலம் நடந்துகொண்டே இருக்கிறது. திருநங்கைகளும் நம்மைப்போல் அனைத்தும் இருக்கும் உயிர்தான் என்ற நினைப்பு தற்போதும் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. ரயில்களில், பொது இடங்களில் ஒதுக்கப்படும் அவர்கள் தீவிர மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதனால் இந்த ஆரோக்கியமற்ற போக்கை உடனடியாக நிறுத்த வேண்டுமென்பதே சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் கருத்தாக இருக்கிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்னமும் சிலர் திருநங்கைகளை தீண்டத்தாகதவர்களாகவே கருதுகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம்  கழுகுமடை அருகே இரண்டு திருநங்கைகளை ஒரு இளைஞர் கொடூரமாக தாக்கி அவரது கூந்தலையும் வெட்டினார். அதை இன்னொருவர் வீடியோவாக எடுத்திருக்கிறார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. மேலும் இந்த இரக்கமற்ற கொடூரர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென பலரும் வலியுறுத்தினர். திருநங்கை க்ரேஸ் பானு இந்த வீடியோவை பகிர்ந்து மதுரை, சிவகங்கை,தூத்துக்குடி மாவட்ட காவல் துறையை ட்விட்டரில் Tag செய்திருந்தார். அதுமட்டுமின்றி மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் இதை Tag செய்திருந்தார்.

 

இந்நிலையில் தமிழ்நாடு காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “மேற்படி காணொளி பதிவில் உள்ள நபர்களை, பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட கண்டறியப்பட்டுள்ளார்கள்.  இது சம்பந்தமாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என குறிப்பிட்டுள்ளது. எனவே திருநங்கைகளை தாக்கிய கொடூரர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தாக்குதலுக்கு உள்ளான அனன்யா, மகேஷ் ஆகிய திருநங்கைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் தாக்கப்படும் வீடியோ வைரலானதை அடுத்து மற்ற திருநங்கைகளும் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.