லைலாவை கரெக்ட் பண்ண ஷபி ரகசிய பிளான்; நரபலி வழக்கில் புது ட்விஸ்ட்!

கேரள மாநிலம் எலந்தூரை சேர்ந்த பக்வால் சிங், லைலா தம்பதியினரின் பேராசை இரண்டு உயிர்களை பலி வாங்க வைத்திருக்கிறது. இதற்கு மூளையாக செயல்பட்ட மந்திரவாதியான ஷபி குறித்து தினந்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது. ஷபி ஒரு சைக்கோ என்றும், மூதாட்டி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக பெண்களை துன்புறுத்தி அதை பார்த்து ரசிக்கும் கொடூர எண்ணம் கொண்டவராக இருந்துள்ளார். இப்படியொரு சூழலில் பக்வால் சிங்கின் வாழ்க்கையில் நுழைந்து நரபலி பிளானை மட்டுமின்றி வேறொரு ரகசிய பிளானையும் போட்டுள்ளார். அதாவது பக்வால் சிங்கின் மனைவி லைலாவை தன் வலையில் சிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பக்வால் சிங்கை கொலை செய்து விட்டு லைலா உடன் புது வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டிருந்ததாகவும் கேரள போலீசார் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. நரபலி மூலம் கொல்லப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரான தமிழகத்தின் தருமபுரியை சேர்ந்த பத்மாவின் செல்போன் ஷபியிடம் இல்லாவிட்டால் இந்நேரம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

அந்த செல்போன் தான் குற்றவாளிகளை கைது செய்ய பெரிதும் உதவியாக இருந்துள்ளது. இதற்கிடையில் ஷபி குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. 6ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஷபி, 16 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அதன்பிறகு வாழ்வதற்காக எந்தவொரு தவறையும் செய்யும் அளவிற்கு துணிந்துள்ளார். இதனால் ஏராளமான வழக்குகள் பாயத் தொடங்கின.

பாலியல் வன்கொடுமை, கொடூர தாக்குதல், கொலை என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த சூழலில் தான் ஸ்ரீதேவி என்ற பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். அதில் பூக்களை புரொஃபைல் படமாக வைத்து பலரையும் தொடர்பு கொண்டு வந்துள்ளார். அந்த வலையில் தான் 2018ஆம் ஆண்டு பக்வால் சிங் சிக்கியிருக்கிறார்.

அவரது குடும்ப நிலையை அறிந்து பணம் கொழிப்பதற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து தர தயாராக இருப்பதாக கூறி நம்ப வைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே நரபலி, நிர்வாண பூஜை உள்ளிட்ட விஷயங்கள் அரங்கேறியுள்ளன. கேரளா மட்டுமல்ல, இந்த வழக்கை தமிழகமும் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஏனெனில் நரபலி கொடுக்கப்பட்டவர்களில் ஒருவர் தருமபுரியை சேர்ந்தவர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் 12 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.