சத்யஸ்ரீ யாருக்கும் கிடைக்க கூடாது…. காதலை ஏற்காததால் வெறிச்செயல்.. விஷமருந்தி தந்தையும் உயிரிழந்த சோகம்

தனது காதலை ஏற்றுக்கொள்ளாத கல்லூரி மாணவி சத்யஸ்ரீ யாருக்கும் கிடைக்க கூடாது என்ற நோக்கத்தில் ரயில் முன் பிடித்து தள்ளியதாக, கைது செய்யப்பட்ட சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளான். 

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி சத்யஸ்ரீயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சதீஷ், திடீரென மின்சார ரெயிலின் முன் சத்யஸ்ரீ யை பிடித்து தள்ளினார். இதில் சத்யஸ்ரீ தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்கள் முன்னிலையில் திடீரென நிகழ்ந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

 

சத்யஸ்ரீயை ரயில் முன் பிடித்து தள்ளி விட்டு தப்பியோடிய சதீஷை துரைப்பாக்கத்தில் நள்ளிரவு 2 மணியளவில் போலீசார் கைது செய்தனர். சத்யஸ்ரீயை ரயிலில் தள்ளி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொள்ள திட்டமிட்டதாகவும் ஆனால் பொதுமக்கள் சூழ்ந்ததால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் கைது செய்யப்பட்ட சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளான். தனது காதலை சத்யஸ்ரீ ஏற்றுக்கொள்ளாததால், தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற நோக்கத்துடன் இந்த செயலை செய்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான்.

 

இதனிடையே, மகள் இறந்த துக்கம் தாளாமல், அவரது தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். விஷம் கலந்த மதுவை குடித்ததால், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மாணிக்கம் உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட மாணவியின் தாய் ராமலட்சுமி தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக உள்ளார். உயிரிழந்த கணவன் மற்றும் மகளின் உடலை பார்க்க முடியாமல் பரிதவித்த ராமலட்சுமியை நேரில் சந்தித்து, காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், ஆதம்பாக்கத்தில் மாணவி சத்யஸ்ரீ மற்றும் அவரது தந்தை மாணிக்கம் ஆகியோரின் இறுதி சடங்கு இன்று மாலை நடைப்பெற்றது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவர்களின் உடல்கள் பழவந்தாங்கல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.